எல்டிடிஇ ஆதரவாளர் இலங்கைக்கு நாடு கடத்தல்
திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத் தமிழர். குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார்.
சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் சந்திரயோகாவை கண்காணித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு சந்திரயோகாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபி என்று தெரிய வந்தது.
இதையடுத்து குடியேற்றப் பிரிவின் உதவியோடு சந்திரயோகாவின் விசா ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திரயோகா திருச்சி அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
பிரபாகரனை ஒப்படைக்க கோரியுள்ளது இந்தியா-பாஜக:
இந் நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறுகையில்,
தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சினையில் குழப்பத்தில் இருக்கிறது. இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதால் இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து முழுமையாக தோற்கடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் தான் முதல்வர் கருணாநிதி 7 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து தமிழ் மக்களை ஏமாற்ற நினைத்தார். ஆனால் அவர் ஏமாந்து போனார். தொடர்ந்து அங்கு தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். போர் நிறுத்தம் என்று சொல்லி கொண்டு தமிழ் மக்களை கொலை செய்வதை ராஜபக்சே கைவிடவில்லை.
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. பிரணாப் முகர்ஜி ஒன்று சொல்கிறார். ப.சிதம்பரம் ஒன்று சொல்கிறார்.
விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் ஊடுருவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தற்போது எழுத்துபூர்வமாக இந்திய அரசு, இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை தனி ஈழத்தை ஆதரிக்கவில்லை. மற்றொரு நாட்டை பிரிக்க இன்னொரு நாடு வற்புறுத்த முடியாது. நமது நாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரை கொலை செய்த பிறகு விடுதலைப் புலிகளின் செல்வாக்கு தமிழ்நாட்டில் குறைந்து விட்டது என்றாலும் புலிகளின் பெயரைச் சொல்லி இலங்கை தமிழர்களை முழுமையாக அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அதை ஏற்க முடியாது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு தனி மாநிலம் அமைக்கவும், சம உரிமை வழங்கவும் சர்வதேச நிர்பந்தங்களை கொடுத்து அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ ஏற்பாடு செய்வோம் என்றவர்,
தமிழகத்தில் பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள் என்று 'ஜோக்கும்' அடித்தார்.