For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தா.பா': இப்போ ஒன்னும் செய்ய முடியாது-நரேஷ்குப்தா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வட சென்னை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தா.பாண்டியனின் வேட்பு மனு ஏற்கப்பட்டதில் எந்தவித விதிமீறலும், சட்ட விதிமுறைகள் மீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

தா.பாண்டியன் தனது சொத்து விவரத்தை மறைத்து விட்டார். இதுகுறித்து நடுநிலை தவறாத தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா நல்ல தீர்ப்பு வழங்குவார் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

இதுகுறித்து நரேஷ் குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை சரியாக காட்டவில்லை என்றாலோ அல்லது தவறாகக் காட்டி இருந்தாலோ, அதன் அடிப்படையில் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யக் கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கான (ஆர்.ஓ.) கையேடு-2009, பக்கம் 64-ல் 10.1-ம் பிரிவின் 8-வது உட்பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது பழைய விதிதான்.

தா.பாண்டியன் விவகாரத்தில் முடிவெடுத்த சென்னை கலெக்டர் மைதிலி ராஜேந்திரன், நியாயமான அதிகாரி. இது எல்லாருக்குமே தெரியும். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் அவர். ஆர்.ஓ. அனைவருமே அந்த கையேட்டின் அடிப்படையில்தான் நடந்து கொள்ள முடியும். வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் பார்வையாளரும் உடன் இருந்துள்ளார். எதாவது தவறு இருந்தால் அதை நிச்சயம் சுட்டிக் காட்டி இருப்பார்.

இதன் பிறகும் தவறு நடந்திருப்பதாகக் கூறினால் அது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம். தேர்தலுக்குப் பின் வழக்குப் போடலாம். இப்போது ஏதும் செய்ய முடியாது.

வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் அதிகாரி ஒரு நீதிபதியைப் போன்றே செயல்படுவார் என்றும் தேர்தல் விதிகளில் கூறப்பட்டு உள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி ஒருவர் இதுபோன்ற பிரச்சனை பற்றி பேசினார். அதற்கு தேர்தல் கமிஷன் செயலாளர் வில்பிரட், கையேட்டை சுட்டிக் காட்டி, தவறான சொத்துக் கணக்கை வேட்பாளர் காட்டி இருந்தாலும் அந்த அடிப்படையில் அவரது வேட்புமனுவை நிராகரிக்கக் கூடாது என்றுதான் அறிவுறுத்தி இருக்கிறார்.

சொத்து பற்றி தவறான தகவல்களை தந்தால் அந்த வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யலாம் என்று முதலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவு பின்னர் 13.3.03 அன்று திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட அந்த உத்தரவை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அடிப்படையிலும் அதுபோன்ற வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய முடியாது.

பதிவு செய்யப்பட்ட ஒரு சொத்தின் விவரத்தை காட்டி இருக்க வேண்டாமா? என்று நீங்கள் கேட்டால், சட்டவிதிகளின் அடிப்படையில்தான் நான் பதில் கூறமுடியும். அந்த வேட்புமனுவை ஏற்கலாமா? ஏற்கக் கூடாதா? என்ற கேள்விக்கு சட்டம் கூறும் பதில்தான் என் பதில். அதன்படி அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய முடியாது. மற்றபடி, தார்மீக அடிப்படையில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவற்றைப் பற்றி நான் பேச முடியாது.

தா.பாண்டியனின் சொத்து விவரங்கள் பற்றிய ஆட்சேபனைகள் அடங்கிய மனுவை திமுக தரப்பில் அல்லது ஆட்சேபனை செய்யும் வேட்பாளர்கள் கொடுத்தால், அதையும் தேர்தல் நோட்டீஸ் பலகையில் போட விதிகள் உள்ளன. தேர்தல் கமிஷனின் உத்தரவும் அதுதான்.
வேட்புமனுவில் காட்டப்படும் சொத்துக்கான ஆட்சேபனைகளின் அடிப்படையில் அதை சரிபார்க்க முடியாது. அந்த சொத்துகள் வேறு மாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் இருந்தால் அதை சரிபார்த்து, வேட்புமனு பற்றி முடிவு செய்ய காலதாமதம் ஆகிவிடும்.

தேர்தல் நடவடிக்கைகள் அமலில் இருக்கும் போது கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. தேர்தல் தொடர்பான கோரிக்கை எது என்றாலும், தேர்தல் முடிந்த பிறகுதான் தேர்தல் வழக்காகத் தொடர முடியும்.

காஞ்சீபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர், தலித் கிறிஸ்தவர் என்ற விவகாரத்தில் கூறப்படும் ஆட்சேபனை பற்றி அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை தெரிவித்தார்களா? என்பது பற்றி தெரியவில்லை.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான எம்.பி. சிவாஜி லிங்கம் தமிழகத்தில் பாஜகவுக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார் என்று புகார்கள் வந்துள்ளன. ஆனால் இது எந்த சட்டத்தின் கீழ் வருகிறது? எந்த சட்டம் அதை தடுக்கிறது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முன்னுதாரணங்களும் இல்லை.

தமிழகத்தில் அரசியல் மோதல் கடுமையாக உள்ளது. எந்த காலகட்டம் என்றாலும் அதிகாரிகளை நிர்ப்பந்தப்படுத்தி உத்தரவுகளை பெறும் நிலை உள்ளது. தேர்தல் நடைமுறைகளில் அவசரம் காட்ட முடியாது. ஏனென்றால் சுப்ரீம் கோர்ட் வரை பதில் சொல்ல வேண்டியது இருக்கும்.

எந்த ஒரு அரசியல் கட்சி என்றாலும் சரி, அரசியல்வாதி என்றாலும் சரி, தங்களுக்குச் சாதகமாக தேர்தல் விதிகளை தேர்தல் அதிகாரிகள் மீற வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. தேர்தல் விதிகளை பின்பற்றுவது மட்டுமே எங்கள் கடமை. விதிமுறைகள் சரியில்லை என்றால் அதை தேர்தல் கமிஷனுக்கு எழுதுவதுதான் முறை. அதற்கான சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றார் நரேஷ் குப்தா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X