ரயில் கடத்தல்-சதிகாரனை அடையாளம் காண தீவிரம்
சென்னை: சென்னை மின்சார ரயிலை கடத்திச் சென்று சரக்கு ரயிலுடன் மோத வைத்து பெரும் விபத்தை ஏற்படுத்திய சதிகாரனின் உடலைக் கைப்பற்றியுள்ள போலீஸார் அவன் யார் என்பதை அறிய தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
உண்மையில், சரக்கு ரயிலுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் மீதுதான் மோத திட்டமிட்டிருந்தனர் சதிகாரர்கள் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த ரயில் விபத்து மிகப் பெரிய சதித் திட்டமாக இருக்கும் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மிகப் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட சதி இது, காத்திருந்து இதை சதிகாரர்கள் நடத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த ரயில் விபத்துக்குப் பின்னால் விடுதலைப் புலிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் ஆகியோரில் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் சந்தேகிக்கிப்படுகிறது.
பெரம்பூர் ரயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசை எச்சரித்த உளவுப் பிரிவு...
சமீபத்தில்தான் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ஈழ ஆதரவாளர்கள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சென்டிரல் ரயில் நிலையத்தில் நாச வேலையில் ஈடுபடலாம் என தமிழக அரசை எச்சரித்திருந்ததாம்.
ரயிலை கடத்தி அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் அல்லது குண்டு வைக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்ததாம்.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளும் கூட நாச வேலையில் ஈடுபடலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்திருந்ததாம்.
இந்த கோணத்தில் தற்போது விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ரயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமல்ல.
நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரயில் சீராக செல்லும்.
இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.
ரயிலை ஓட்டிச் சென்ற நபர் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு கீழே குதித்திருக்க வாய்ப்பில்லை. அப்படிக் குதித்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது. எனவே அந்த நபரும் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதை உறுதி செய்வது போல நேற்று கிடைத்த நான்கு உடல்களில் 3 மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு உடல் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடந்தது.
அந்த உடலுக்குரிய நபருக்கு 35 வயது இருக்கலாம். இந்த நபர்தான் சதிகாரனாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நபரின் புகைப்படத்தை வைத்து சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தான் அந்த நபரை பார்த்ததாக, எஸ்.டி.டி. பூத்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நபர் கடந்த ஒருமாதமாக சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து போயுள்ளார். குறிப்பாக அதிகாலையில்தான் அவர் அதிகம் வந்துள்ளார். ரயில் நிலையத்திற்கு வந்து போனில் பேசுவது வழக்கமாம்.
நேற்றும் கூட அதிகாலையில் போனில் பேசியுள்ளார். எனவே அவர் யாருடன் பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த தகவல் போலீஸாருக்கும் பெரும் உதவியாக உள்ளதாம்.
இறந்து கிடந்த மர்ம நபர்தான் ரயிலை ஓட்டிச் சென்றுள்ளார். அவரை எஸ்டிடி பூத்காரர் பார்த்துள்ளார். இந்த நபர் அடிக்கடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நீண்ட நாட்களாக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயலாக இது கருதப்படுகிறது.
இந்த சதிக்குப் பின்னால் பலர் இருக்கலாம், ஏதாவது அமைப்புக்கும் இதற்குத் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் போலவே இந்த சம்பவம் நடந்திருப்பதால் மிகப் பெரிய அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. நிச்சயம் இந்த நபர் தீவிரவாதியாக இருக்கும் எனவும் போலீஸார் உறுதியாக கூறுகிறார்கள்.
இந்த சம்பவத்தை அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரம் மீது விமானத்தை விட்டு மோதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குல் சம்பவத்துடன் ஒப்பிடலாம் எனவும் போலீஸார் கூறுகிறார்கள்.
ரயிலை கடத்தி ஓட்டிச் சென்ற நபரின் உண்மையான இலக்கு, சரக்கு ரயிலுக்குப் பின்னால் வந்த பயணிகள் ரயில்தான். அதில் மோதியிருந்தால் மிகப் பெரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இடையில் சரக்கு ரயில் குறுக்கிட்டதால் திட்டம் குளறுபடியாகி விட்டது.
இன்னும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம் என சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர். முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
மொத்தம் 2 பேர் சேர்ந்து ரயிலைக் கடத்தி ஓட்டியதாக நம்பப்படுகிறது. ஆனால் இறந்தவர்களில் மூன்று பேரின் அடையாளம் தெரிந்து விட்டது. நான்காவது நபர்தான் சதிகாரர்களி்ல் ஒருவன் என சந்தேகிக்கப்படுகிறது. அப்படியானால் இன்னொரு நபர் எங்கே என்ற கேள்வியம் எழுந்துள்ளது.
இறந்த நான்கு பேருமே பெட்டியில் பயணம் செய்தவர்கள். எனவே ரயிலை ஓட்டிய நபர் தப்பியிருக்கலாமோ என்ற சந்தேகம் வந்துள்ளது.
இந்த நிலையில், சென்டிரலிலிருந்து கிளம்பிய ரயில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில், ரயில் வரும் பகுதிக்கு டிராக் மாற்றப்பட்டுள்ளது. அதைச் செய்தது யார் என்று தற்போது விசாரணை நடந்து வருகிறது. டிராக்கை மாற்ற உதவிய நபருக்கும், சதிகாரர்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர்கள் யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.