மணல் கொள்ளையர் அட்டகாசம்: இன்ஸ்பெக்டர்-ஏட்டு கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று அதிகாலை மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் ஜீப் மீது மணல் கொள்ளையர் லாரியை மோத செய்தனர். இதில் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஒருவரும் பலியானார்கள். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவில் பகுதிகளில் இருந்து அதிக அளவு மணல் கொள்ள நடந்து வருகிறது. நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் கட்டுமான வேலைகளுக்கு இங்கு இருந்து தான் மணல் திருட்டுத்தனமாக கொண்டு வரப்படுகிறது.
இது தொடர்பாக சமீபத்தில் நாகர்கோவில் போலீசாருக்கு அதிக அளவில் புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் தினமும் இரவு முதல் அதிகாலை வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், ஏட்டுக்கள் ஸ்டீபன் சிங், ஜெயராஜ், சத்தியமூர்த்தி, சுரேஷ் குமார் ஆகியோர் போலீஸ் ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பக்கமாக திருட்டு மணலை ஏற்றிகொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை ஜீப்பைக் கொண்டு போலீசார் தடுத்தபோது லாரி டிரைவர் வண்டியை நிறுத்தாமல் அசுர வேகத்தில் ஓட்டி வந்து ஜீப் மீது மோதினார்.
இதில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், ஏட்டு ஸ்டீபன் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். மற்ற மூன்று போலீசாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.