டைம் டாப் 100 விஐபிக்கள் பட்டியலில் ரஹ்மான், நந்தன் நிலேகனி!
நியூயார்க்: புகழ்பெற்ற டைம் பத்திரிகையின் உலகின் 100 முன்னணி விஐபிக்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் இந்தியாவின் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
டைம் பத்திரிகையின் டாப் 100 உலக பிரமுகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல், அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், ஓப்ரா வின்ப்ரே உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இரண்டு விஜபிக்களின் பெயர் இந்தப் பட்டியலில் உள்ளது. ஒருவர், சமீபத்தில் இரட்டை ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். மற்றவர் இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி. ஒவ்வொரு விஐபியைப் பற்றியும் வேறு ஒரு விஐபி தெரிவித்துள்ள கருத்துக்களையே அறிமுகமாகக் கொடுத்துள்ளது டைம்.
இதில், 'இந்தத் தலைமுறைக்கான இசையைக் கொடுத்தவர் ஏஆர் ரஹ்மான்' எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகையும் சல்மான் ருஷ்டியின் முன்னாள் காதலியுமான பத்மா லட்சுமி.
'நிலேகனி வெறும் கார்ப்பரேட் மட்டுமல்ல, இந்தியாவின் சர்வதேசத் தூதுவரும் கூட' என அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் க்யூ அண்ட் ஏ என்ற நாவலை எழுதிய விக்ரம் ஸ்வரூப்.