குறை சொன்ன கலெக்டர்-ராஜினாமா செய்த தாசில்தார்
தேனி: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு தரமான உணவு கொடுக்கவில்லை என்று தேனி கலெக்டர் குறை கூறியதை அடுத்து வெறுத்து போன தாசில்தார் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 13ம் தேதி துவங்குகிறது. இன்னும் இரண்டு வாரகாலம் கூட முழுமையாக இல்லாத நிலையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது, தபால் ஓட்டுக்கான வாக்குசீட்டுகளை கவர்களில் பிரித்து போட்டு தேவையான இடங்களுக்கு கொடுப்பது போன்ற வேலைகள் நடந்து வருகிறது.
இதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவங்களிலும் நடந்து வருகிறது. தேனியில் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த தேர்தல் ஆயத்த பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுக்கு மதிய உணவு வழங்கும்படி தேனி மாவட்ட கலெக்டர் முத்துவீரன், தாசில்தார் மனோகரன் என்பவரிடம் கூறினார். இதையடுத்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கேன்டீனுக்கு தானே நேரில் சென்று மதிய உணவு வாங்கி வந்துள்ளார்.
அது அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் தரம் படுமட்டமாக இருந்ததாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தை ஒரு அலுவலர் கலெக்டர் காதிலும் போட்டுவிட, தாசில்தாரை நேரில் அழைத்து கலெக்டர் முத்துவீரன் 'செம டோஸ்' கொடுத்துள்ளார்.
கலெக்டர் அலுவலக கேன்டீன் உணவு தரமில்லாமல் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் என நினைத்த தாசில்தார் மனோகரன் வேலையே வேண்டாம் என உதறிவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
தனது இடத்துக்கு வந்து அங்கு ராஜினாமா கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு இடத்தை காலி செய்தார். தேர்தல் நேரத்தில் தாசில்தார் ஒருவர் ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மூட் அவுட் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்து தாசில்தார் மனோகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தனக்கு பணிமாற்றம் கொடுத்தால் வேலைக்கு வருவதாக சொன்னார். பின்னர் ஒரு வழியாக வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அதே பதவியில் அமர வைத்தனர்.