சுமதியின் மோசடியில் 2 மத்திய அமைச்சர்களுக்குத் தொடர்பு
பாஸ்போர்ட் வழங்குவதில் பெருமளவில் மோசடியில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள சுமதி ரவிச்சந்திரனை 3 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகிறது.
அவர் தவிர சுமதியின் கணவர் ரவிச்சந்திரன், டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜு ஆகியோரையும் சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமதியிடம் மட்டும் 100 கேள்விகளை அதிகாரிகள் கேட்டு பதில்களை வாங்கியுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, சுமதிக்கும், மத்திய அமைச்சர்கள் இருவர், சில உயர் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இருப்பினும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் மட்டுமே மத்திய அமைச்சர்களிடம் விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம்.
சுமதி வழங்கிய அனைத்து பாஸ்போர்ட்களையும், குறிப்பாக தத்கல் திட்டத்தின் கீழ் வழங்கிய பாஸ்போர்ட்களை சிபிஐ ஆராய்ந்து வருகிறது.
பல பாஸ்போர்ட்கள் போலியான முகவரிகளைக் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. அதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் சரமாரியாக கேள்விக்கு கேட்டுள்ளனர்.
சுமதி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், அவரது சொத்து விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து தகவல் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சஸ்பெண்ட்டா...
இதற்கிடையே சுமதி ரவிச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாரா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவுகிறது. அதுகுறித்து சிபிஐக்கு இதுவரை எந்தத் தகவலும் இல்லையாம்.
அதேசமயம், சுமதியின் கணவரான டாக்டர் ரவிச்சந்திரனை சென்னை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் மாநகராட்சி டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.