செல்போன் நிறுவன அதிகாரி வெட்டி கொலை-தொழில் போட்டியா?
சென்னை: சென்னையில் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போனுக்கான காப்புரிமை கொண்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
காப்புரிமை பிரச்சினையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் சிஐடி காலனியில் விகாஸ் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த கம்பெனியின் பங்குதாரர்களில் ஒருவரான ராம்குமார் என்பவர் இரண்டு சிம்கார்டுகளை போட்டு பேசுவதற்கான மொபைல் போனை தயாரிக்க காப்புரிமை பெற்றுள்ளார். அவருடன் ஜேம்ஸ், முருகேசன், ஜெகதீசன் ஆகியோரும் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
ஆனால், இவர்களின் அனுமதி பெறாமல் சில பெரிய செல்போன் நிறுவனங்கள் இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் செல்போன்களை தயாரித்துள்ளன. இதையடுத்து விகாஸ் சிஸ்டம்ஸ் அந்த நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் விகாஸ் சிஸ்டம்ஸ் சார்பில் வக்கீல் துரைமாணிக்கம் மற்றும் அவரது மகன் பெர்டினாண்ட் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விகாஸ் சிஸ்டம்ஸ அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பாக வக்கீல்கள் இருவரையும் காலை 9.30 மணிக்கு கேகே நகரில் உள்ள பெப்யூ ராஜா சாலையில் உள்ள அவர்களது வீட்டில் சென்று சந்தித்துள்ளனர்.
அவர்களுடன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திவாகரன் என்ற சங்கரன் (60) சென்றிருந்தார். அவர்கள் ஆலோசனை முடித்துவிட்டு, காலை 11.30 மணிக்கு வக்கீல் வீட்டில் இருந்து வெளிவரும் போது அங்கு 3 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்தது.
இதையடுத்து அனைவரும் பதறியடித்து கொண்டு ஓடினர். தலைமை செயல் அதிகாரி சங்கரனுக்கு காலில் ஏற்கனவே காயம் ஏற்பட்டிருந்ததால் அவரால் வேகமாக ஓடவில்லை. இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல் சராமரியாக வெட்டி சாய்த்தது. இதில் சங்கரன் சம்பவ இடத்திலே துடிதுடித்து பலியானார்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பு துலக்கி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி ஜெயஸ்ரீயிடம் இருந்து விவாகரத்து வாங்கிய சங்கரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர். அவரது சொந்த ஊர் கேரளா என்றும் அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் செல்போன் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் அந்த நிறுவனத்தாரிடம் பேசியதாகவும், தான் விரைவில் சென்னைக்கு வருவதாகவும் அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினை சுமூகமாக முடித்துவிடலாம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து காப்புரிமை தொடர்பான பிரச்சினையில் சங்கரன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.