விருதுநகர் அருகே சாத்தூர் ராமச்சந்திரனை விரட்டிய பொது மக்கள்!
விருதுநகர்: விருதுநகர் அருகே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க வந்த அமைச்சர் சாத்தூர் ராசந்திரனை பொது மக்கள் வெளியேறுமாறு மிரட்டியதால் அவர் அவசரமாக வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே உள்ளது குல்லூர் சந்தை. இந்த பகுதியில் உள்ள குடிநீரில் குளோரைடு அதிக அளவில் உள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி பலவித போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு அதிகாரிளும், மக்கள் பிரநிதிகளும் இதில் போதிய அளவு அக்கரை காட்டவில்லை.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டு கேட்டு அந்த பகுதிக்கு வந்தார்.
அப்போது அவர் பேசும் போது இந்த பகுதி மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பேன் என்று பேசினார்.
அப்போது ஆவேசம் அடைந்த அந்த கிராம மக்கள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரனை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் பொது மக்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு பொது மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை.
மக்கள் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் பயந்து போன சாத்தூர் ராமச்சந்திரன் ஊரை விட்டு வெளியேறினார்.