இலங்கைக்கு ஆயுதம்: பொய் பிரசாரம் செய்தால் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
சென்னை: இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்புவதாக பொய் பிரசாரம் செய்து கலகம் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
ஹைதராபாத்தில் ராணுவ பயிற்சியை முடித்துவிட்டு மதுக்கரை ராணுவ முகாமுக்கு சில ராணுவ வீரர்களின் உடைமைகள் மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய அரசு வாகனங்களில், இலங்கை ராணுவத்தினருக்கு ஆயுதங்களை கொச்சி வழியாக அனுப்புவதாக, பெரியார் திராவிட கழகத்தினர் பொய் பிரசாரம் செய்துள்ளனர்.
அவர்கள் சுமார் 100 பேர் புறவழிச்சாலை கோவைப்பிரிவு அருகில் மாலை 3.45 மணிக்கு ராணுவ வாகனங்களை வழிமறித்து, கண்ணாடிகளை சேதப்படுத்தியும், வாகனங்களில் இருந்து ஓட்டுநரின் உடைகள், கூடாரத் துணிகள், பிளாஸ்டிக் நாற்காலிகள் போன்றவற்றை எடுத்து வெளியில் போட்டு தீ வைத்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை விரட்டி அயடித்ததோடு, மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியார் திராவிட கழக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவையற்ற பொய் பிரசாரம் செய்து, கலகம் விளைவிக்கும் நோக்கத்துடன் ராணுவ வாகனங்களை தாக்கி சேதப்படுத்த தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்று பொய்யான வதந்திகளை பரப்புவோர் மீதும், அதன் பேரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.