அரசியல் கட்சிகளின் பினாமிகளாக செயல்படும் சுயேச்சைகள் - தீவிர கண்காணிப்பு
நெல்லை: அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுயேச்சைகள் யாராவது பிரசாரம் மேற்கொள்கிறார்களா என்று தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 13ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட 931 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 377 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேட்பு மனு வாபஸ் பெற கடைசிநாளான கடந்த 27ம் தேதி அரசியல் கட்சிகள் மாற்று வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 107 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது தேர்தல் களத்தில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 824 பேரும், புதுவையில் 28 பேரும் என 852 பேர் உள்ளனர்.
40 தொகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு தனிதனியாக சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
அந்த சின்னங்களின் அடிப்படையில் பெரும்பாலான சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் இதுவரை ஈடுபடவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
இத்தகவலை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தமிழகத்திலுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு மேற்படி சுயேட்சை வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்களா... அவர்கள் பயன்படுத்தும் வாகன விபரங்கள்..வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்காக பிற கட்சிகளின் வேட்பாளர்களின் ஏஜென்டுகளாக, சுயேட்சையாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் பினாமியாக நிறுத்தப்பட்டுள்ளனரா...என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செலவழிக்கும் வேட்பாளர்கள் தாங்கள் செலவழிக்கும் பணத்தை சுயேட்சைகளின் கணக்கில் காட்டுவதாக தேர்தல் கமிஷன் கவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் அந்தந்த தொகுதி தேர்தல் நடக்கும் அலுவலரிடம் கணக்கு ஒப்படைத்து வருகின்றனர். அவர்கள் கொடுத்துள்ள கணக்குகளில் சுயேட்சைகளின் செலவு அதிகமாக உள்ளதாக என்பது குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் சுயேட்சைகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் உண்மையிலேயே பிரச்சாரம் மேற்கொள்கிறார்களா...அவர்கள் காட்டும் செலவு கணக்கு சரியானதா... என்பது குறித்து விவரங்கள் சேகரிக்க பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அவர்களுக்கு பின்னணியில் உள்ள சுயேட்சை வேட்பாளர்களும் கலக்கமடைந்துள்ளனர்.