என் சகோதரி ஜெ. சொன்னதை செய்வார்-வைகோ
சென்னை: ஜெயலலிதா சொன்னைதை செய்யக்கூடியவர். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றால் தனி ஈழம் அமைக்கப்படும் என மதிமுக செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பிடித்துள்ளன. வடசென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து பெரவள்ளூரில் நடந்த கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறுகையில்,
இந்த இடத்தில் தான் தியாகி முத்துகுமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழியாக தான் அவரின் இறுதி ஊர்வலம் சென்றது. என் வாழ்வில் பார்த்திராத மக்கள் சோகத்தை அன்று பார்த்தேன்.
இதுவரையில் இலங்கை தமிழர்களுக்காக 16 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இன்றும் போர் நடந்து வருகிறது. அங்கு போர் நிறுத்தப்படவில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். எல்லாம் பொய், பித்தலாட்டம்.
நெருமாறனை பார்த்தா அப்படி சொல்வது...
இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கிறோம். விடுதலைபுலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக பாடுபடும் எங்களை பார்த்தா சொல்வது? ஒரு துறவியை போல் வாழும் பழ.நெடுமாறனை பார்த்தா அப்படி சொல்வது?
பிரபாகரனை நெருங்க முடியாது. விடுதலைபுலிகளை யாராலும் அழிக்க முடியாது. நல்ல ஆட்சியை மலர செய்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்போம்.
தமிழர்களை அழிக்க சோனியா முயற்சி...
தமிழர்களை அழிக்க சோனியாகாந்தி முயற்சி செய்து வருகிறார். இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கீறி சிசுக்களை எடுத்து தெருவில் வீசுகின்றனர். இந்த கொடிய செயல்களை அவர்கள் நிறுத்த சொல்லவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது பற்றி வெளியே பேசக்கூடாது என்கிறார்கள்.
எங்கள் அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமைப்போம் என்று சகோதரி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் சொன்னால் கண்டிப்பாக செய்வார்.
எதிர்காலத்தை மாற்றும் தேர்தல்...
ராஜீவ்காந்தி அரசு ஊழலாலே கவிழ்ந்தது. இப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் அது தானே நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்ந்து இருக்கிறது.
தங்கம் விலை எட்டா உயரத்திற்கு சென்று இருக்கிறது. ஏழைகளால் தங்கம் வாங்க முடியுமா? தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளில் இருந்தும் மே 16-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த தீர்ப்பு இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும் என்றார் வைகோ.
மக்களை அடக்கிவிட முடியாது...
வைகோவை தொடர்ந்து தா. பாண்டியன் பேசுகையில்,
இலங்கை பிரச்சினை பற்றியோ, சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் சம்பவம் குறித்தோ, ஐகோர்ட்டில் நடந்த சம்பவம் குறித்தோ பேசக்கூடாது என்று ஆளுங்கட்சி கூறுகிறது. அதனால் தான் நாஞ்சில் சம்பத்தை சிறையில் வைத்தார்கள். திரைப்பட இயக்குனர்களை சிறையில் வைத்தார்கள்.
அங்கே நடப்பதை இங்கே சொன்னால் என்ன தப்பு? மக்களின் எண்ணங்களை அடக்கிவிட முடியாது. தேர்தலுக்காக வரும் அரசியல்வாதிகள் நாங்கள் அல்ல. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்காக செயல்படக்கூடியவர்கள்.
வேட்புமனு தாக்கலில் நான் என்னவோ சொத்துக்கணக்குகளை தவறாக கொடுத்து விட்டதாக முதல்வர் சொல்கிறார். இது அவராக சொல்லவில்லை. ஒளியில்லாத ஜோதி எடுத்து கொடுத்து, அவர் கேட்கிறார். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
அண்ணாநகரில் நான் வாங்கிய வீடு வீட்டு வசதி வாரியம் மூலம் வாங்கப்பட்டது. அது எப்போது வாங்கப்பட்டது அவருக்கு தெரியாமலா இருக்கும். இந்த வீடு 11/2 கிரவுண்ட். இதில் 1/2 கிரவுண்ட் இடத்தை நான் மறைத்து விட்டதாக அவர் சொல்கிறார். இதை நான் மறைக்கவே இல்லை என்றார் தா.பாண்டியன்.