செப்டம்பருக்குள் எல்லாம் சரியாகிவிடும்! - அறிஞர்கள் கருத்து
டெல்லி: செப்டம்பருக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்பும் என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மீட்சி ஐடி துறைக்குப் பொருந்தாது என்றும், மற்ற துறைகளை விட ஐடி துறை மட்டும் சரியான பாதைக்குத் திரும்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மீட்சியின் முதல் கட்டமாக வரும் காலாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதம் வரை உயரக்கூடும் என்றும், செப்டம்பர் மற்றும் அக்டோபரில் வளர்ச்சி ஆரம்பமாகிவிடும் என்றும் நிபுணர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
எப்ஐசிசியின் பொதுச் செயலாளர் அமித் மித்ரா கூறுகையில், கோடைக்குப் பிறகு அனைத்துத் துறை நடவடிக்கைகளிலுமே பெரிய மாறுதலை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமரின் பொருளாதாரச் செயலாளர் சுரேஷ் டெண்டுல்கரோ இன்னும ஒருபடி மேலே போய், பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் ஏற்கெனவே துவங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
கேபிஎம்ஜியின் அர்விந்த் மகாஜன் கூறுகையில், நிச்சயம் பொருளாதார வளர்ச்சி வழக்கமான பாதைக்குத் திரும்பிவிடும். 6 முதல் 7 சதவிகித வளர்ச்சியை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என்றார்.
ஏற்கெனவே எஃகு மற்றும் இரும்புத் துறையிலும், சிமெண்ட் உற்பத்தியிலும் நல்ல வளர்ச்சி தெரிவதாகவும், இந்த ஆண்டு விவசாயம் கைகொடுத்தால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி நினைத்ததை விட சிறப்பாக அமையும் என்றும் கூறினார் மகாஜன்.
எல்லாம் எதிர்பார்ப்பது போல நடந்தால் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும் என்றும் அவர் கூறினார்.