அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்-கொதிக்கிறது தமிழகம்
கடந்த ஏப்ரல் மாதம் முதலே தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வருகிறது. நடுவில் நான்கு நாட்கள் மழை பெய்ததால் மக்கள் ஓரளவு தப்பித்தனர்.
தற்போது கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வழக்கமாக உச்சி வெயில் தலையை காய்த்தால் கூட கவலைப்படாமல் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களும் தற்போது வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.
வேலூரில் 110 டிகிரி வெயில்...
இந்நிலையில் நேற்று முன்தினம் வரை சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில் நேற்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சதத்தை தாண்டியது. சென்னையிலும், திருச்சியிலும் தலா 105 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது.
மதுரை மற்றும் சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கோவையில் 100 டிகிரியாகவும், அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டாகவும் வெயில் இருந்தது.
இதையடுத்து வேலூர் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில் இன்று மதியம் 12.00 மணி முதல் அக்னி நட்சத்திரம் வேறு துவங்குவதால் மக்கள் நிலைமை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர். அக்னி நட்சத்திரம் அடுத்த 23 நாட்களுக்கு, அதாவது வரும் 28ம் தேதி இருக்கும்.
அக்னி நட்சத்திரம் காரணமாக இனி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், வெயில் அதிகரித்தால், வெப்பம் சலனம் அதிகமாகி மழை வரும் வாய்ப்பும் உள்ளது என்பது மட்டுமே மக்களுக்கு ஆறுதலான விஷயம்.