கருணாநிதியை சந்திக்க அனுமதியில்லை-அன்பழகன்
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியை யாரும் பார்க்க முயற்சிக்க வேண்டாம். அவருக்கு நல்ல ஓய்வு தேவை. எனவே அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
முதுகுவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
அவர் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியதால், நேற்றும், இன்றும் கருணாநிதி மேற்கொள்ளவிருந்த பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாளை மறு நாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார். தீவுத் திடலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அதில் முதல்வர் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், முதல்வருக்கு மேலும் சில நாட்கள் ஓய்வு தேவை. அதுவரை யாருக்கும் அவரை சந்திக்க அனுமதி இல்லை என்று அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நமது தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இன்னும் சில நாட்கள் ஓய்வு பெற வேண்டி இருப்பதால் அவரை பார்க்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனவே யாரும் கலைஞரை பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் சோனியா கூட்டத்திற்கு முதல்வர் வருவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.