எதிர்பார்த்த மாதிரி இல்லை நானோ புக்கிங்!
காரணம், குறைந்தது 5 லட்சம் கார்களுக்கு புக்கிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2.03 லட்சம் கார்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கனவுக் கார் என வர்ணிக்கப்பட்ட நானோ கார் சூப்பர் ஹிட்டாகும் என மீடியா வர்ணித்தது. டாடாவும் பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருந்தது.
ஆனால் நானோ முன்பதிவு துவங்கும்போதே, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் அதுவும் குலுக்கல் முறையில் கார் கிடைக்கும். மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதும் மக்கள் ஆர்வமிழக்கத் தொடங்கினர். இதனால் முதல் மூன்று தினங்களில் நாடுமுழுவதிலுமிருந்து வெறும் 40 ஆயிரம் விண்ணப்பங்களே வந்திருந்தன.
இப்போது முன்பதிவுகள் முடிந்துவிட்டன. மொத்தம் 2.03 லட்சம் முழுமையாக செலுத்தப்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் மூலம் ரூ.2500 கோடியைப் பெற்றுள்ளது டாடா நிறுவனம். ஆனால் டாடா எதிர்பார்த்தது குறைந்தது 5 லட்சம் முன்பதிவுகள். இதன் மூலம் குறைந்தது ரூ.7000 கோடி புரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது.
தற்போது குஜராத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் நானோக்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இப்போது கிடைத்துள்ள ஆர்டரோ வெறும் 2.03 லட்சம்... அதாவது உற்பத்தி அளவை விட 49700 முன்பதிவுகள் குறைந்துள்ளது.
இது டாடா மோட்டார்ஸை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏன் இந்த மோசமான முன் பதிவு?
'டாடா மோட்டார்ஸ் நானோ முன் பதிவுக்கு வைத்த அளவுக்கதிகமான விலைதான் இதற்குக் காரணம். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் வரை நானோவுக்கு முன்பணமாகவே செலுத்த வேண்டியுள்ளது. அதற்குப்பிறகு 40 ஆயிரம் ரூபாயை மட்டும் தவணையில் செலுத்த வேண்டும். இதில் பெரிய கவர்ச்சி இல்லாமல் போய்விட்டது.
இந்தக் காரின் விலையே ரூ.1 லட்சம் என்றுதானே சொன்னார்கள். இப்போது ரூ.1 லட்சம் முன்பதிவுக்கு மட்டுமே என்றால் எப்படி? என பல ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் சண்டை போடுகிறார்கள்.
இன்னொன்று எந்த வகுப்பினரை முன்னிறுத்தி நானோவைத் தயாரித்தார்களோ, அந்த வகுப்பினரின், ஆரம்ப முதல் செலுத்தும் திறன் பற்றியே டாட்டா மோட்டார்ஸ் சிந்திக்கவில்லை', என ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நானோவின் மூன்று மாடல்களில் இப்போது அடிப்படை மாடல் இரண்டுக்கும் பெரிய வரவேற்பில்லை. விலை அதிகமுள்ள மூன்றாவது மாடல் காருக்குத்தான் 50 சதவிகித முன்பதிவு நடந்துள்ளது.
ஆக, ஏழைகளுக்கான காரை வாங்க ஏழைகள் முன்வரவில்லை, அல்லது அடிப்படை மாடல் அவர்களைக் கவரவில்லை என்பதே உண்மை என்கிறார்கள் நிபுணர்கள்.
முன்பதிவுக்கு மட்டும் 6.10 லட்சம் விண்ணப்பங்களை மக்கள் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் மூன்ரில் ஒரு பங்குதான் உண்மையில் முன்பதிவு செய்துள்ளனர்.