பாஜக பணக்காரர்கள் ஆதரவு கட்சி-ராகுல் காந்தி
அஜ்மீர்: பாஜக பணக்காரர்கள் ஆதரவு கட்சி. அவர்கள் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை என காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அங்கு அஜ்மீரில் நடந்த பொது கூட்டத்தில் அவர் பேசுகையில்,
தேர்தல் நேரம் என்பதால் பாஜக, சுவிஸ் வங்கி கணக்குகள் குறித்து பேசி வருகிறது. அவர்களது ஆட்சி காலத்தில் இது தொடர்பாக அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அரசு செய்த ஊழல்களை பற்றி ஏன் பாஜக வாய் திறக்க மறுக்கிறது.
அத்வானி வலுவான தலைவர் என்கிறார்கள். அவர் உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் தான் காந்தகார் விமான கடத்தலின் போது தீவிரவாதிகளை விடுதலை செய்தனர். இதை பாஜகவினர் மறந்துவிட்டார்கள்.
காங்கிரஸ் அரசு நாட்டில் உள்ள ஒவ்வொடு தட்டு மக்களுக்காகவும் உழைத்து வருகிறது. ஏழைகள், கூலிக்காரர்கள், விவசாயிகள், பின்தங்கிய மக்கள் மற்றும் பழங்குடியினர் என அனைவரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். ஆனால், பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
பாஜகவினர் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் 2004ல் இந்தியா ஒளிர்கிறது என பிரசாரம் செய்தார்கள். அதற்கு அப்போது மக்கள் நல்ல தீர்ப்பு வழங்கினர். 2004ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்களுக்காக பாடுபடுவோம் என தெரிவித்தோம். அதை செய்து காட்டினோம்.
பாஜக கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு கால் சென்டர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால் விவசாயிகள் எதற்கு என நினைத்து வருகிறார். விவசாயிகள் கொடுத்த உணவை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு அவர் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால், ஏன் பணத்தை வீணடிக்கிறீர்கள் என பாஜகவினர் கேட்கின்றனர்.
பாஜக இந்தியாவை ஏழை மற்றும் பணக்காரர்கள் என இரண்டு பிரிவாக பிரிக்க நினைக்கிறது. ஆனால், காங்கிரஸ் அனைவருக்காகவும் உழைக்கிறது என்றார் ராகுல் காந்தி.