சந்திரபாபு-சிரஞ்சீவி கூட்டணி வரும்- சிபிஎம்
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சிக்கு அரசு அமைக்க போதிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்துக்கு என இரண்டு தேர்தல்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. மே 16ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
இந் நிலையில் ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நாராயணா நிருபர்களிடம் கூறுகையில்,
காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் என ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை எந்த கட்சிக்கும் அரசு அமைக்க தேவையான சீட்கள் கிடைக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்வோம்.
இரு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி எப்படியாவது கூட்டணி ஆட்சி ஏற்படுத்துவோம். இல்லையென்றால் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, சிரஞ்சீவியிடம் ஆதரவு பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விடுவார். ஆந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதுதான் எங்கள் லட்சியம்.
சிரஞ்சீவி முதல்வர்...
அதற்காக நாங்கள் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். பிரஜ்ஜா ராஜ்ஜியம் கட்சி அதிக இடங்களில் வென்றால் சிரஞ்சீவியை முதல்வராக்கவும் தயங்க மாட்டோம். இரண்டு கட்சிகளும் சமமான இடங்களை பெற்றால் இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டு ஆட்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் முயற்சிகள் நடக்கும்.
காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கறுப்பு பணம் ரூ. 72 லட்சம் கோடியில் இருந்து ரூ. 100 லட்சம் கோடியாக கூடிவிடும்.
மத்தியில் மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்பு பணம் முழுவதும் உடனடியாக மீட்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் என்றார் அவர்.