4வது கட்டத் தேர்தல்-இன்று பிரச்சாரம் ஓய்ந்தது
டெல்லி: மக்களவை தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 85 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்தத் தொகுதிகளில் நாளை மறுநாளான 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
நாடாளுமன்றத்திற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நான்காவது கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 85 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கும்.
இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.