பஸ் கட்டணம்-போக்குவரத்து அதிகாரிகள் மீது வருகிறது நடவடிக்கை!
பஸ் கட்டணம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்துறைச் செயலாளர், போக்குவரத்துத்துறைச் செயலாளர் மற்றும் 7 வட்டாரப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் ஆகியோருக்கே உண்டு.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி மாநிலம் முழுவதும் டவுன் பஸ் கட்டணங்கள் திடீரென குறைக்கப்பட்டன. தேர்தல் ஆதாயத்துக்காக பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, தலைமை தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பினார்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை டெல்லிக்கு அழைத்து தேர்தல் கமிஷனர்கள் நவீன் சாவ்லா, குரேஷி, சம்பத் ஆகிய மூவரும் விளக்கம் கேட்டனர். இது சம்பந்தமாக ஸ்ரீபதி அளித்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு திருப்தியை தரவில்லை.
இதையடுத்து ஏற்கனவே இருந்தபடி பழைய கட்டணங்களையே வசூலிக்குமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதன்படி மீண்டும் பழைய கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இந் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பஸ் கட்டணத்தை குறைத்தது மிகப்பெரும் தவறு கூறியுள்ள தலைமைத் தேர்தல் கமிஷன், இந்தத் தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை இன்று (5ம் தேதி) தமிழகம் வந்துள்ள 3 தேர்தல் ஆணையர்களிடமும் தமிழக அரசு விளக்கியாக வேண்டும்.
இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
உள்துறை செயலாளர் மாலதி, போக்குவரத்துத்துறை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பால்ராஜ், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் சட்டநாதன், மதுரை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன்,
கோவை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பால்ராஜ், சேலம் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஞானசேகரன், விழுப்புரம் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் பரமசிவம், கும்பகோணம் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ராஜு ஆகியோர் மீது இடமாற்றம் உள்ளிட்ட எந்த வகையான நடவடிக்கையும் வரலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையே பஸ் கட்டணக் குறைப்பால் தமிழகம் முழுவதும் மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டும் ரூ. 4 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.