மதுரையில் வோட்டுக்கு நோட்டு-அறி்க்கை அனுப்பினார் குப்தா
சென்னை: திமுக சார்பில் அழகிரி போட்டியிடும் மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான புகார் அறிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.
இந்தத் தொகுதியி்ல் வாக்காளர்களுக்குப் பணம் தரப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் சார்பி்ல் அக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்தது.
பிரசாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்கள், முளைப்பாரி கொண்டு வரும் பெண்களுக்கு அந்த இடத்தில் ஒரு டோக்கன் தரப்படுவதாகவும், அந்த டோக்கனை அப்பகுதி திமுக வட்டச் செயலாளர் அல்லது திமுக தேர்தல் அலுவலகத்தில் காட்டினால் அங்கு பணம் வழங்கப்படுகிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகார் தெரிவித்திருந்தது.
மேலும் மதுரை மாவட்ட நிர்வாகம் செயலிழந்துவிட்டதாகவும், அரசு நிர்வாகம் முழுக்க முழுக்க திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினாப்.
இந் நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இந்த புகார்கள் தொடர்பான அறிக்கையை நரேஷ் குப்தா அனுப்பியுள்ளார். மேலும் இன்று
சென்னை வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடமும் இது குறி்தது குப்தா விளக்குவார்.
இதற்கிடையே நவீன் சாவ்லாவை சந்தித்து இது தொடர்பாக நேரில் புகார் அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் அப்பாயிண்ட்மென்ட் கோரியுள்ளனர்.
உதவி கமிஷனர்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்:
இதற்கிடையே ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை நகர உதவி கமிஷனர் தங்கவேலு, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை அதிமுக கூட்டணிக் கட்சியினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தபோது அவர்களை விட்டுவிட்டு பிடித்து வந்த அதிமுக கூட்டணிக் கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த அதிகாரிகள் மீது புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
19 'கவர்கள்' பறிமுதல்:
இந் நிலையில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த திமுக தொண்டரான அழகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர மேலும் 14 திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ. 500, ரூ. 100 கொண்ட 19 கவர்களையும் பறிமுதல் செய்துள்ளதாக நகர போலீஸ் கமிஷ்னர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.