ரயிலை கடத்தியவன் முன்னாள் ரயில்வே ஊழியர்?
இது குறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தினத்தந்திக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டி:
சென்னையில் ரயில் கடத்தல் வழக்கில் சரியான கோணத்தில் விசாரணை நடக்கிறது. அந்த விபத்தில் இறந்து போன 4வது நபரின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் வரவில்லை. அந்த நபர்தான் ரயிலை கடத்திச் சென்ற நபராக இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம்.
மேலும் ரயில்வே துறை நடத்திய விசாரணையில் ரயில் மோதிய நேரம் வரை அதை யாரோ ஓட்டிச் சென்றுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், என்ஜினில் யாருடைய பிணமும் இல்லை. எனவே மோதும் நேரத்தில் அந்த மர்ம நபர் வெளியே குதித்திருக்கலாம்.
பிளாட்பாரத்தில் பலத்த காயங்களோடு கிடந்த இந்த நபரின் பிணத்தை பார்க்குமபோது அவர் மோதப்போகிற நேரத்தில் வெளியே குதித்து இருக்கலாம் என்று கருத இடம் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இப்போது விசாரணை நடந்து வருகிறது.
அந்த நபர் தெலுங்கராக இருக்கலாம். இதுபற்றி விசாரிக்க 3 சிபிசிஐடி தனிப்படையினர் ஆந்திராவில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரயிலை கடத்திய நபர் அதை ஓட்டத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். எனவே அந்த நபர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ரயில் என்ஜின் ஊழியராகவோ, அல்லது ஏதாவது பிரச்சினையில் சிக்கி மன உளச்சலால் பாதிக்கப்பட்ட ரயில் என்ஜின் டிரைவராகவோ இருக்கலாம்.
இந்த மர்ம நபர் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தரப்படும். தகவல் தெரிந்தவர்கள் சென்னையில் உள்ள சிபிசிஐடி கட்டுப்பாடு அறைக்கு 044-22502510 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக இந்த நபர் நக்ஸலைட்டாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.