அழகர்கோவிலிலிருந்து கள்ளழகர் நாளை மதுரை புறப்பாடு
சைவம் மற்றும் வைணவத்தின் ஒற்றுமையை எடுத்துக் காட்டும் அற்புதத் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழா. தனித் தனியான இரு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒரே விழாவாகக் கொண்டாடும் பாங்கு இந்த சித்திரைத் திருவிழாவின் முத்திரை ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். அதேபோல அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம் மதுரை வைகை ஆற்றில் பெருமாள், கள்ளழகர் கோலத்தில் இறங்குவது.
இந்த இரண்டு விழாக்களுக்கும் ஒரு தொடர்பை வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண மதுரைக்கு கிளம்புகிறார் அழகர் பெருமான். ஆனால் அவர் மதுரை வந்து சேருவதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட அழகர் பெருமான், மதுரைக்குள் காலெடுத்து வைக்காமல், நதியோராமாகவே திரும்பிச் சென்று விடுவதுதான் இந்த விழாக்களின் பின்னணி.
இப்படிப்பட்ட திருவிழாவின் முக்கிய அம்சமான திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த நிலையில் அழகர்பெருமான், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு நாளை கிளம்புகிறார்.
மே 9ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
இதற்காக கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப் பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படுகிறார். அழகர் மலையில் இருந்து வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளும் கள்ளழகர் ஏப்.8ம் தேதி மதுரை வருகிறார். காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்களின் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எழுந்தருளும் கள்ளழகர் மாலையில் தல்லாகுளம் அவுட்போஸ்ட்டில் எழுந்தருளுகிறார். அங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது.
இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடையும் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆறு நோக்கி புறப்படுகிறார். வழியில் தமுக்கம் எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மே 9ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.