அடகு நகை-மீட்க வாக்காளர்களுக்கு பணம் தரும் பாலு
சென்னை: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு போட்டியிடும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், வாக்காளர்கள் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க சேட்டுகளுக்கு பணம் தருவதாக டி.ஆர்.பாலு கூறியுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கூறியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் பயம் இல்லாமல் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வைக்கும் பொறுப்பு தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. ஆனால், பல தொகுதிகள் பதற்றமாக காணப்படுகிறது. இதற்கான வேலையில் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள் ஈடுபடுகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்களிக்க நிர்ப்பந்திக்கிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரோ, அந்த தொகுதியில் உள்ள மார்வாடி கடைக்காரர்களை அழைத்து, அடகு வைத்த நகைகளுக்கு பணம் தருவதாகவும், நகையை அடகு வைத்தவர்களிடம் திருப்பி கொடுத்துவிடும்படியும் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
மதுரையில் தேர்தல் பணி தொடங்கும் முன்பே, ஆளும் கட்சிக்காரர்கள் அத்துமீறல் வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதற்கான ஆதாரங்களை அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளோம்.
மதுரை தொகுதியில் 87 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 70 ஆயிரம் வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டதை தேர்தல் கமிஷன் கண்டுபிடித்து நீக்கியுள்ளது.
ஆரத்திக்கு டோக்கன் - கடையில் கொடுத்தால் மளிகைப் பொருள்...
அங்கு, தி.மு.க. வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு டோக்கன்கள் கொடுத்து, குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள்.
மதுரையில் தேர்தலை முறையாக நடத்த வேண்டிய மாவட்ட கலெக்டரும், போலீஸ் கமிஷனரும் ஆளும் கட்சியின் எடுபிடியாக மாறிவிட்டனர். அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. எனவே, இருவரையும் மாற்ற வேண்டும்.
தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கைது செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
மதுரை தொகுதிக்கு கூடுதலாக தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க வேண்டும். அங்குள்ள அனைத்து சமூக விரோதிகளையும், தற்போது ஜாமீனில் வெளிவந்தவர்களையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.
மதுரை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக சில வீடியோ ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம் என்றார் ரங்கராஜன்.