மாயாவதியை டிஸ்மிஸ் செய்தால் ஆதரவு-முலாயம்
மைன்புரி: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச பகுஜன் சமாஜ் அரசை டிஸ்மிஸ் செய்யும் எந்த கட்சியையும் கூட்டணியையும் ஆதரிக்கத் தயார் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நிபந்தனை விதித்துள்ளார்.
மைன்புரி நகரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
உத்தரபிரதேச அரசு இளைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வருகிறது. எனவே மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்யும் கட்சி, கூட்டணிக்குத் தான் தேர்தலுக்குப் பின் நாங்கள் ஆதரவு தருவோம்.
இதுவரை நடந்துள்ள 3 கட்டத் தேர்தல்களையும் பார்க்கும்போது, சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கூட்டணியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று தெளிவாகிறது என்றார்.
ஏற்க முடியாது-காங்கிரஸ் மறுப்பு:
முலாயமின் நிபந்தனை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறுகையில், சமாஜ்வாடி கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கியமான அங்கம்தான். எனினும் காங்கிரசோ, ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ மாயாவதி அரசுக்கு எதிராக, அரசியலமைப்புக்கு மீறிய இது போன்ற நிபந்தனைகளை ஆதரிக்கும் என்று நான் கருதவில்லை என்றார்.