1 கி.மீ. தொலைவில் பிரபாகரனை நெருங்கியது ராணுவம்-நீருக்கடியில் சுரங்கம் கண்டுபிடிப்பு
ஆனாலும் பிரபாகரன் மக்கள் மத்தியில் இருப்பதாலும், அவரைச் சுற்றி 1000 தற்கொலைப் படை வீரர்கள் இருப்பதாலும் ராணுவம் நெருங்க முடியாமல் நிற்கிறது.
விடுதலைப் புலிகள் தற்போது முள்ளிவாய்க்கால் மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இரு பகுதிகளில் மட்டுமே நிலை கொண்டுள்ளனர்.
இதையடுத்து மற்ற அனைத்துப் பகுதிகளின் வழியாகவும், ராணுவத்தின் 3 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் சுற்றிச் சூழ்ந்து முன்னேறி வருகிறார்கள்.
ராணுவத்தின் நகர்வைத் தடுக்கும் வகையில் பிரமாண்டமான, வலுவான மண் அரண்களை புலிகள் அமைத்துள்ளனர். இவற்றைத் தகர்ப்பது மிகக் கடினமாக இருப்பதாலும், இப்பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாலும் ராணுவத்தின் முன்னேற்றம் வெகுவாகத் தடைப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மண் அரணாகத் தகர்த்த பின்னரே ராணுவத்தால் முன்னேற முடிகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பீரங்கித் தாக்குதலை நடத்தி மண் அரண்களை ராணுவத்தினர் தகர்த்து வந்தனர். நேற்று கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த மிகப் பெரிய மற்றும் கடைசி மண் அரண் தகர்க்கப்பட்டது.
இதன் மூலம் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் ராணுவம் நுழைந்தது.
தற்போது விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையிலான தூரம் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவுதான். அதாவது 800 மீட்டர் தூரத்தில்தான் விடுதலைப் புலிகள் உள்ளனர்.
அவர்களுடன் கிட்டத்தட்ட 20 ஆயிரம் மக்கள் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்தியில்தான் பிரபாகரன் இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்களை நெருங்க முடியாதபடி சுற்றிலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. தற்கொலைப் படையினரும் பெரிய அளவில் தாக்குவார்கள் என்பதால் ராணுவம் மெதுவாக முன்னேறி வருகிறது.
சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு..
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் கட்டி வந்த மிகப் பெரிய நீருக்கடியிலான சுரங்கப் பாதையை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
வெள்ள முள்ளிவாய்க்கால் நீர்பரப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை இருந்தது. இன்னும் அது கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுள்ளது.
முக்கியத் தலைவர்கள் இதன் வழியாக தப்புவதற்காக தோண்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தண்ணீர் உள்ளே புகுந்து விடாமல் தடுக்க இரும்பு அரண்களுடன் கூடியதாக அந்த சுரங்கப் பாதை உள்ளது.
உள்ளே சில சிறு சிறு அறைகளும் கூட உள்ளன. அதி நவீன தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தவிட்டை சாப்பிடும் தமிழர்கள்..
இந்த நிலையில் புலிகளுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கு சுத்தமாக சாப்பாடு கிடைக்காத நிலைமை நிலவுகிறது. இதனால் அவர்கள் தவிட்டை சாப்பிடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.