பிரபாகரன் தப்ப வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி சிக்கியது?
கொழும்பு: வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் நவீன நீர்மூழ்கிக் கப்பலை ராணுவம் கைப்பற்றியுள்ளது. பிரபாகரன் இதன் மூலம் தப்ப திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
வன்னிப் பகுதியில் புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளை ராணுவ அதிகாரி ஜெயசூரியா தலைமையிலான படையினர் அங்குலம் அங்கலுமாக சோதனையிட்டபோது இந்த நீர்மூழ்கி சிக்கியது.
360 அடி நீளமும், 25 அடி அகலமும் கொண்ட இந்த நீர்மூழ்கி, வீடு போன்ற தோற்றத்தில் இருந்தது. நீண்ட படகு போல காணப்பட்டது அது, 3 பிரிவாக பிரித்து கட்டப்பட்டிருந்தது.
படகின் முன் பகுதியில் என்ஜின் இருக்கிறது. வால் பகுதியில், குண்டு துளைக்காத உலோக அறை உள்ளது. படகு இருந்த பகுதியில் நீண்ட கால்வாயும் வெட்டப்பட்டிருந்தது.
சிக்கலான நேரத்தில் இந்த நீர்மூழ்கியைக் கொண்டு கடலுக்குள் தப்பிச் செல்லும் அளவுக்கு முன்னேற்பாட்டுடன் இருந்தது.
வெட்டப்பட்டிருந்த வாய்க்கால் அவ்வளவு சீக்கிரம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இரு பக்கமும் உலோகத் தகடுகளைக் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது.
பிரபாகரன் தப்பிச் செல்லவே இந்த நீர்மூழ்கி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் என ராணுவம் சந்தேகிக்கிறது.