ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி - மன்சூர் அலிகான் உள்பட 72 பேர் கைது
திருச்சி: திருச்சிக்கு நேற்று பிரசாரத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திருச்சி தொகுதி லதிமுக வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று திருச்சியில் ராகுல் காந்தி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தென்னூர் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடந்தது. இதற்காக அவர் காரில் உழவர் சந்தை திடலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, செட்டி பாலம் அருகே, மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் கறுப்புக்கொடியுடன் வந்தனர். ராகுல் காந்தியைக் கண்டித்து கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த 52 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.
அதேபோல, 19 லதிமுக தொண்டர்களுடன் நடிகர் மன்சூர் அலிகான், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்ட காத்திருந்தார். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தி பி்ன்னர் விடுவித்தனர்.
ராகுல் காந்தி நேற்று சிவகங்கை, திருச்சி ஆகிய இரு ஊர்களில் பிரசாரம் செய்தார். இரு ஊர்களிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் முடிந்தது போலீஸாருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.