பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடந்தேறியது.
தங்கை மீனாட்சியின் கல்யாணத்திற்காக அழகர் கோவிலிலிருந்து கிளம்பி வரும் அழகர், தான் வருவதற்குள் கல்யாணம் முடிந்து விட்டதை அறிந்து கோபம் கொண்டு மதுரை நகருக்குள் வராமல் ஆற்றோடு நின்று அப்படியே திரும்பிப் போவதாக ஐதீகம்.
இதை விளக்கும் வகையில் ஆண்டுதோறும் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது.
இன்று காலை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் திரண்டிருக்க, வைகை ஆறு, மக்கள் கடலாக மாறிக் காணப்பட்டது.
கோவிந்தா முழக்கம் விண்ணைத் தொட மக்களின் ஆரவார கோஷங்களுக்கு மத்தியில், காலை சரியாக 7.10 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
ஆற்றில் இறங்கியதும் அழகர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து மக்கள் அவரை வணங்கினர்.
அழகர் எந்தப் பட்டை உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அது தொடர்பானவை அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர். இதனால் இந்த ஆண்டு நல்ல மழையும், செழிப்பான விவசாயமும் இருக்கும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தையொட்டி மதுரை நகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மதுரை நகர் மற்றும் வைகை ஆற்றுப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தசாவதாரம்..
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் நடக்கும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து வண்டியூர் செல்லும் கள்ளழகர் அங்குள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் இரவு 11 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
நாளை மறுநாள் மே 10ம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். 11ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் தேதி கள்ளழகர் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுகிறார்.