அழகிரி குறித்து விமர்சனம்- அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் மு.க. அழகிரியை விமர்சனம் செய்ததைக் கண்டித்து அ.தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை ஆண்டாள்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. பேச்சாளர் பாண்டி என்பவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனும், தென் மண்டல அமைபுபச் செயலாருமான மு.க. அழகிரியை விமர்சனம் செய்து பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்த செல்லப்பாண்டி, கந்தன் மற்றும் சிலர் சேர்ந்து 41-வது வார்டு ஜெ., பேரவை செயலாளர் கார்த்திக்கை அரிவாளால் தாக்கினர்.
இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரிவாளால் வெட்டிய கந்தனை அதிமுகவினர் வளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து எம்.எல்.ஏ.,க்கள் போஸ், நன்மாறன், நகர செயலாளர் செல்லூர் ராஜூ, மார்க்சிஸ்ட் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் ஆண்டாள்புரத்திலும், சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பும் மறியல் போராட்டம் நடந்தினர்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தினர்.
காயமடைந்த கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
கைதான கந்தன் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.