வி.சி பிரமுகரை விடுக்க காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
பரமக்குடி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி பரமக்குடி காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகே இருக்கும் எமனேஸ்வரம் தெய்வேந்திர நகரை சேர்ந்தவர் ராமசந்திரன்(52).
இவர் கடந்த மே 6ம் தேதி திமுக வேட்பாளர் நடிகர் ரித்திஷ் குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, இவரை அதே தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் இருபது பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி வழக்கு பதிவு செய்து மதியழகனை கைது செய்தார்.
இந்த விஷயத்தை கேள்விபட்ட மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள் மதியழகனை விடுதலை செய்ய கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பெண்களிடம் சமரசம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர்.