ஆபாச போஸ்டர்-அஸம்கான் மீது ஜெயப்பிரதா புகார்
உ.பி. மாநிலம் ராம்பூரில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட அமர்சிங் பெருவாரியான விருப்பத்தை தெரிவித்தார் முலாயம் சிங் யாதவிடம். ஆனால் இதை கடுமையாக எதிர்த்தார் அஸம்கான். இதனால் அமருக்கம், அஸமுக்கும் இடையே மோதல் மூண்டது. இருப்பினும் முலாயிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி ஜெயப்பிரதாவுக்கு சீட் வாங்கி விட்டார் அமர்.
இருந்தாலும் விடாத அஸம்கான் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தார். ராம்பூர், அஸம்கானின் சொந்த ஊர் என்பதால் ஜெயப்பிரதாவின் பிரசாரத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் அமர்சிங்கின் துணையுடன்தான் ஜெயப்பிரதா இங்கு அஸமின் எதிர்ப்பை சமாளித்து பிரசாரம் மேற்கொண்டார்.
அமர்சிங், அஸம்கான் மோதல் மேலும் மேலும் முற்றி வரும் நிலையில் அஸம்கான் மீது பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார் ஜெயப்பிரதா.
தான் நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர்களை தொகுதிக்குள் சுற்றுக்கு விட்டு வருகிறார் அஸம்கான் என்பதே அவரது குற்றச்சாட்டு.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நான் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் போகிறேன்.
எனது நிர்வாண போஸ்டர்களை தொகுதி முழுவதும் அனுப்பி வருவது மிகவும் தரக்குறைவான, கீழ்த்தரமான செயலாகும்.
ஏற்கனவே என்னைப் பற்றிய அவதூறு ஆபாச சிடிக்களை தொகுதி முழுவதும் அவர்கள் விநியோகித்தார்கள். இப்போது ஆபாச போஸ்டர்களை அனுப்பி வருகின்றனர்.
இதை நான் வெறுக்கிறேன். ஒரு பெண்ணை இப்படி அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தக் கூடாது. இப்படி செய்தால் நாளை எந்தப் பெண்ணும் அரசியலுக்கு வரத் தயங்குவார்.
என்னை மக்கள் நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர். ஆனால் கட்சிக்குள் இருக்கும் சிலரே இப்படி நடந்து கொள்வது வேதனையைத் தருகிறது. இது மிகவும் ஏமாற்றமாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது.
அஸம்கான் எனக்கு அண்ணன் மாதிரி. ஆனால் அவரோ இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன.
அவர்கள் வெளியிட்ட ஆபாச சிடியை நான் இதுவரை பார்க்கவில்லை. ஆனால் ஆபாச போஸ்டரைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். அது மிகவும் மோசமான ஒன்றாக உள்ளது என்றார் ஜெயப்பிரதா.
உ.பி. அரசியலில் அஸம்கான், அமர்சிங் இடையிலான மோதல் பெருமளவுக்கு கட்சிப் பெயரை நாறடித்து வருவது குறித்து யார் பக்கம் சாய்வது என்று தெரியாமல் கட்சித் தலைவர் முலாயம் சிங் பெருத்த அமைதியாக இருக்கிறார்.