பிகாரில் தேர்தல் முடிந்ததும் நிதிஷ் அடித்த 'பல்டி'!
லூதியானா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என கூறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார், நேற்று மோடியுடன் ஒரே கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிகாரில் தேர்தல் முடியும் வரை மோடியுடன் கூட்டத்தி்ல் பங்கேற்க மாட்டேன் என்று கூறியவர் அங்கு வாக்குப் பதிவு முடிந்த பின் பல்டி அடித்துவிட்டார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, மோடி, நிதிஷ், அணி மாறி வந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அகாலிதளம் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்கு வரும் முன் பாட்னாவில் நிருபர்களிடம் பேசிய நிதிஷ்,
இடதுசாரி கட்சிகளோ, காங்கிரசோ என்னிடம் கூட்டணி குறித்துப் பேசவில்லை. நான் பாஜக கூட்டணியில் தான் இருக்கிறேன். இந்த கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். தெலுங்கானா கட்சி பாஜக கூட்டணிக்கு வந்திருப்பதால் பாஜக கூட்டணியின் பலம் கூடியுள்ளது. மத்தியில் மற்றவர்களின் ஆதரவில்லாமல் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.
ராகுல் ஏமாந்து விட்டார்-லாலு:
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு நிருபர்களிடம் கூறியதாவது:
நிதிஷ் குமார் மதசார்பற்றவர் என்பது போல ராகுல் காந்தியும் மற்றும் சில காங்கிரசாரும் பேசி வந்தனர். ராகுலை ஒருபடி மேலேயே போய் நிதிஷை பாராட்டினார்.
இப்போது நிதிஷ்குமாரின் சாயம் இப்போது வெளுத்து விட்டது.
டெல்லியில் நடந்த பாஜக கூட்டணிக் கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்கிறார் என்பதால் அப்போது நிதிஷ்குமார் அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. இப்போது பிகாரில் அனைத்து கட்ட தேர்தலும் முடிந்து விட்டதால் மோடி பங்கேற்ற கூட்டத்தில் இவரும் கலந்து கொண்டுள்ளார்.
ராகுல் காந்தி நிதிஷ்குமாரை நம்பி ஏமாந்து விட்டார். ராகுல் காந்தி, நிதிஷ்குமாருக்கு கொடுத்த மதசார்பற்றவர் சான்றிதழுக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது என்றார்.
பாஸ்வானும் கண்டனம்...
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறுகையில்,
பிகாரில் தேர்தலுக்கு முன் வரை மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று நிதிஷ் கூறிவந்தார். பிகாரில் தேர்தல் முடிந்தவுடன் தனது சுயரூபத்தை காட்டிவிட்டார். இதன் மூலம் நிதீஷ் குமார் எத்தகைய மதச்சார்பின்மை உடையவர் என்பதை பிகார் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வரும் காலத்தில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இதற்கிடையே நிதிஷ்குமாருடன் தாங்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் அவரும் மூன்றாவது அணிக்கு வருவார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சாரியா கூறியுள்ளார்.