காங்கிரசுக்கு ஆதரவா?: 16க்குப் பின்னர் முடிவு-காரத்
கொல்கத்தா: காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை என்று இது நாள் வரை கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறப் போகும் கடைசிகட்டத்தில், அதுகுறித்து பரிசீலிப்போம் என இப்போது கூறியுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், முதலில் தேர்தல் முடியட்டும். முடிவுகள் வெளியாகட்டும். மே 16ம் தேதிக்குப் பிறகு அதுகுறித்து யோசிக்கலாம்.
அரசு அமைப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து முடிவெடுக்கும்.
மத்தியில் மதச்சார்பற்ற அரசு வர வேண்டும் என்பதே இடதுசாரிகளின் நோக்கம். தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே குறைவான எம்.பிக்கள்தான் கிடைப்பார்கள். எனவே மதச்சார்பற்ற அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ்தான் முடிவெடுக்க வேண்டும்.
அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை காங்கிரஸ் அல்லாத முன்னணியிலேயே நீடிக்கும் என நம்புகிறோம்.
நிச்சயம் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவம் மாட்டோம்.
3வது அணிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எங்களது அணி கட்டுக் கோப்பாகவே உள்ளது. தற்போது தனியாக போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலுக்குப் பின்னர் எங்களுடன் இணையும். அனைவரும் சேர்ந்து காங்கிரஸ், பாஜகவுக்கு இணையான அணியாக உருவெடுப்போம் என்றார் காரத்.