சோனியா பிரச்சார மொழிபெயர்ப்பு-சொதப்பிய 'ஞானம்'
சென்னை: சென்னையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உரையை மொழிபெயர்ப்பதில் காங்கிரஸ் சொதப்பியதையடு்தது அவர் என்ன பேசினார் என்பது கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
நேற்று சென்னை தீவுத்திடலில் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் பங்கேற்க கூட்டம் நடந்தது.
ஏற்கனவே கடந்த 6ம் தேதி பிரசாரத்துக்கு வருவதாக கூறி பின்னர் அதை ரத்து செய்த சோனியா காந்தியின் பேச்சை கேட்க காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கூடினர். இதையடுத்து அவரது பேச்சுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சோனியாவும் உற்சாகமாக ஆங்கிலத்தில் உரையை துவக்கினார். ஆனால், அவரது பேச்சை தமிழில் மொழி பெயர்த்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சொதப்பினர். சோனியாவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து பேச முடியாமல் தவித்தார். சோனியா பேசியதை முழுமையாக அவர் மொழி பெயர்க்கவில்லை.
டிவியிலும், நேரிலும் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு மொழிபெயர்ப்பு செய்கிறோம் என்ற பொறுப்பு கொஞ்சம் கூட இல்லாமல் கடனுக்கு மொழி பெயர்த்தார்.
இவர்களது மொழிபெயர்ப்பால் லட்சக்கணக்கான தமிழர்களை சோனியாவின் பேச்சு உடனே சென்றடையாமல் போய்விட்டது. சோனியாவின் பேச்சை கேட்க வந்த கட்சி சார்பற்ற சாதாரண மக்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவிடாமல் போய்விட்டது.
ஞானதேசிகனின் மொழிபெயர்ப்பை கேட்டு கோபமடைந்த கூட்டத்தினர் சத்தமிடத் தொடங்கினர். ஒரு சமயத்தில் சோனியா தொடர்ந்து நீண்ட நேரம் பேசினார். ஆனால், அதை ஞானதேசிகன் உப்பு சப்பில்லமல், குரலில் எந்த சிரத்தையும் இல்லாமல் ஒரே வரியில் சொல்லி முடித்துவிட்டார். அப்போது சோனியாவே அவரை பார்த்து அவ்வளவு தானா... என கேட்டார்.
ஞானதேசிகன் பதில் சொல்ல முடியாமல் தவித்தார்
ஞானதேசிகனின் மொழிபெயர்ப்பு தொடர்ந்து மோசமாக போய் கொண்டிருக்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மேடையில் இருந்த முதல்வர் கருணாநிதியிடம் போய் ஏதோ சொன்னார். அவரும் உதட்டைப் பிதுக்கினார்.
இதையடுத்து ஞானதேசிகன் பின்னால் போய் நின்று அவரிடம் தயாநிதி மாறன் ஏதோ கூறினார். ஆனாலும் ஞானசேகரனின் கொட்டாவி மொழிபெயர்ப்பில் மாற்றமே இல்லை.
மேலும் ஞானதேசிகன் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மொழி பெயர்ப்பை தமிழக காங்கிரத் தலைவர் தங்கபாலு குறை சொல்லிக் கொண்டு வாசனிடம் ஏதோ கூற, அவர் தங்கபாலுவிடம் ஏதோ கோபமாகக் கூறினார்.
ஒரு கட்டத்தி்ல் மொழி பெயர்ப்பு படுமோசமாகிவிட தங்கபாலு ஓடிச் சென்று ஞானதேசிகனை உட்காரச் சொல்லிவி்ட்டு மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ஞானதேசிகனும் ஆளவிட்டால் போதும் என தனது இடத்தை தேடிபிடித்து போய் உட்கார்ந்து கொண்டார்.
ஆனால், தங்கபாலுவும் தனக்கும் மொழிபெயர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை தான் பேசிய முதல் சில நிமிடங்களிலே உணர்த்திவிட்டார்.
சோனியா பேசுவதை விட்டுவிட்டு தான் பாட்டுக்கு மனதில் தோன்றியதை சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், ஞானதேசிகன் அமைதியாக மொழி பெயர்த்தார்.. தங்கபாலு உணர்ச்சிவசமாகப் பேசினார். ஆனால், சோனியாவின் பேச்சை விட்டுவிட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.
கட்சியின் தலைவர் உரையை மொழிபெயர்க்க போகிறோம் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் ஏனோ தானோ என இவர்கள் மொழிபெயர்த்தது கூட்டத்தில் இருந்த பல ஆங்கிலம் அறிந்த கூட்டணி தொண்டர்களை புலம்ப வைத்துவிட்டது.