தமிழர்கள் மாபெரும் போராட்டம் -ஸ்தம்பித்துப் போன டோரன்டோ
பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் டோரன்டோவில் உள்ள மிக முக்கிய ஸ்பாடினா அவென்யூ கார்டினர் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
டோரன்டோ நகருக்குச் செல்லும் மிக முக்கிய நெடுஞ்சாலை இது. எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் சாலை என்பதால் தமிழர்களின் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
போலீஸ் தரப்பில் 1000 பேருக்கு மேல் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் பல ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரத்திற்கு கார்டினர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் பலமுறை கோரியும் தமிழர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள முன்வரவில்லை. கனடா பிரதமருடன் தாங்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
மேலும் பல நூறு தமிழர்கள் போராட்ட இடத்திற்கு வருவதை அறிந்த போலீஸார் அவர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர்.
விடிய விடிய நீடித்த இந்தப் போராட்டம் இன்று காலையில்தான் முடிவுக்கு வந்தது.
தமிழர்களின் போராட்டம் கனடா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் துறையைச் சேர்ந்த சக் கோன்கல் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஏராளமான சிறார்களும் பங்கேற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்..
இதற்கிடையே, இலங்கை இனப்படுகொலையைக் கண்டிக்காமல் மெளனம் சாதிக்கும் உலக சமுதாயத்தைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமாண்ட போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பின்னலாங் பூங்கா என்ற இடத்திலிருந்தும், மெல்போர்ன் நகரிலிருந்தும் தலைநகர் கான்பெராவுக்கு வாகன ஊர்வலம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
மக்கள் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள பகுதி மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதலில் கடந்த சனிக்கிழமை மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள் ரிபப்ளிக் சதுக்கத்திற்கு திரண்டு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றம் முன்பு முற்றுகைப் போராட்டத்திற்கு அந்த நாட்டு தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.