தா.பாண்டியனை தகுதியவற்றவராக அறிவிக்க கோரி திமுக வழக்கு
சென்னை: சொத்து விவரத்தை முழுமையாக தெரிவிக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தா.பாண்டியனை வட சென்னை தொகுதியில் போட்டியிட தகுதியவற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு:
76 வயதான தா.பாண்டியன் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் வசித்து வருகிறார். வடசென்னை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் இவர் போட்டியிடுவதற்கு தகுதியுடையவர் அல்ல.
காரணம், இவர் தனது சொத்து விவரத்தை முழுமையாக வேட்பு மனுவோடு தாக்கல் செய்யவில்லை. இவரது மனைவிக்கு சொத்து உள்ளது. அதுபற்றி இவர் விவரம் தரவில்லை.
தா.பாண்டியனுக்கு சொந்தமான சொத்து எந்தெந்த இடத்தில் உள்ளது. அதன் பரப்பளவு எவ்வளவு, சர்வே எண் என்ன போன்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்கள் சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தமும் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, தா.பாண்டியனின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார். முழு சொத்து விவரத்தை தாக்கல் செய்யாத நிலையில், வேட்பாளராக தா.பாண்டியனை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேர்தல் அதிகாரி தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டார்.
முழு சொத்து விவரத்தை தாக்கல் செய்யாததால் தா.பாண்டியன் தேர்தலில் போட்டியிட தகுதியை இழக்கிறார்.
எனவே, அவரை தகுதி இழக்க செய்யக்கோரி இந்திய தேர்தல் கமிஷனுக்கும், வடசென்னை தேர்தல் அதிகாரிக்கும் கடந்த 2-ந் தேதி மனுக்களை அனுப்பினோம். ஆனால் இதுவரை இந்த மனு மீது விசாரணை நடத்தப்படவில்லை. முடிவும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே தா.பாண்டியனை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வடசென்னை தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் கமிஷனுக்கும் கோர்ட்டு உத்தரவிட வேண்டும். வாக்குப்பதிவில் அவருக்கு விழக்கூடிய ஓட்டுகளை அவருக்கு சாதகமாக கருத்தில் கொண்டு எண்ணக்கூடாது. இந்த தேர்தலில் போட்டியிட தா.பாண்டியன் தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.