துரோகம்: கருணாநிதியை எதிர்காலம் பழிக்கும்-நெடுமாறன்
நாகப்பட்டிணம்: பதவி ஆசை காரணமாக கருணாநிதி ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார். அவரை எதிர்கால வரலாறு நிச்சயம் கருணாநிதிக்கு பழிக்கும் என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டிணத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் செல்வராஜூக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நெடுமாறன் பேசுகையில்,
காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை என காங்கிரஸ் அரசு எதையும் தீர்த்து வைக்கவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. உலகின் ஐந்தாவவது பெரிய கடற்படையை வைத்துள்ள இந்தியாவினால் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட 4 ஆயிரம் தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை.
இன்றைக்கு இலங்கையில் நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஐந்து மாதத்தில் மட்டும் இலங்கை ராணுவம் 10 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்துள்ளது. அங்கு சுமார் மூன்றரை லட்சம் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இரண்டரை லட்சம் தமிழர்கள் படுகாயங்களுடன் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி பசி, பட்டினியுடன் சாவை எதிர்நோக்கி உள்ளனர்.
உலகில் எந்த ஒரு நாட்டிலும், எந்த இனத்திற்கும் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சியும், அதற்கு துணை போன திமுகவும் தான் காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர்.
இலங்கை அரசுக்கு ஆயுதங்கள், வீரர்கள் பயிற்சி, பணம் அத்தனை உதவிகளையும் செய்து இந்திய அரசு தமிழர்களை கொல்ல உதவி இருக்கிறது. இது கருணாநிதிக்கு தெரியும். ஆனால் பதவி ஆசையால் கருணாநிதி ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். ஆகவே எதிர்கால வரலாறு நிச்சயம் கருணாநிதிக்கு பழிக்கும்.
தோல்வி பயத்தில் படுத்துவிட்டார்...
ஜெயலலிதா தமிழ் ஈழம் அமைக்க இந்திய ராணுவத்தை அனுப்புவேன் எனக்கூறியதும் மிரண்டு போன முதல்வர் கருணாநிதி தோல்வி பயத்தில் படுத்து கொண்டுள்ளார். அதிமுக கூட்டணி நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 16ம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஆட்சி மாற்றம் உறுதி. அப்போது மாநில அரசின் நிலைமையிலும் மாறுதல் வரும் என்றார் நெடுமாறன்.