தமிழக தேர்தல் களத்தில் 64 கோடீஸ்வரர்கள்-33 பேர் குற்றக்கறை படிந்தவர்கள்
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நாளை இறுதிக் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 1205 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். அவர்களில் 4 பேருக்கு தலா ரூ. 500 கோடிக்கு மேல் உள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் தேர்தல் களம் கண்டது ஆந்திராவில்தான். அங்கு மொத்தம் 117 கோடீஸ்வரர்கள் போட்டியிட்டுள்ளனர்.
அடுத்த இடம் கர்நாடகத்திற்கு. அங்கு 93 பேர் போட்டியிட்டுள்ளனர். தமிழகத்தில் 64 கோடீஸ்வரர்கள் களம் கண்டுள்ளனர். ஒரிசாவில் 27 பேரும், கேரளாவில் 18 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவர்.
சொத்தே இல்லை என்று கூறியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 223 ஆகும்.
அதிக அளவிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ். அக்கட்சியின் சார்பில் 261 பேரும், பாஜக சார்பில் 177 கோடீஸ்வரர்களும், பகுஜன் சமாஜ் சார்பில் 147 பேரும், சமாஜ்வாடி சார்பில் 63 பேரும் போட்டியிட்டனர்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் உள்ள தென் மாநிலம் கேரளா. அங்கு மொத்தம் போட்டியிட்ட 217 பேரில் 46 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
கர்நாடகத்தில் 45 பேரும், தமிழகத்தில் 33 பேரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.
தமிழக கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே அதிக சொத்துக்களைக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டமான். குறைந்த சொத்துக்களைக் கொண்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
அதிக சொத்துக்களைக் கொண்ட வேட்பாளர்களில் 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் தேமுதிகவைச் சேர்ந்த முத்துவேல்ராஜ் (ரூ. 31 கோடி). 3வது இடம் மு.க.அழகிரிக்கு (ரூ. 19 கோடி). 4வது இடத்தில் இருக்கிறார் விஜய டி.ராஜேந்தர் (ரூ. 14 கோடி).
திமுக சார்பில் போட்டியிடும் நடிகர் ஜே.கே.ரித்தீ்ஷ், நடிகர் கார்த்திக்கை விட பணக்காரர் - தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்குப்படி. ரித்தீஷிடம் ரூ. 12 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. கார்த்திக்கின் சொத்து மதிப்பு ரூ. 6 கோடியாகும்.
முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் கொங்கு நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த தேவராஜன் (ரூ. 9 கோடி), நடராஜன் (ரூ. 9 கோடி) ஆகியோரும் கோடீஸவரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.