தனி ஈழம்: ஜெ. தரும் 'மயக்க பிஸ்கட்'- வீரமணி
திருச்சி: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சை கேட்டபோது ரயில் பயணிகளுக்க மயக்க பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் கொள்ளை சம்பவங்கள் தான் ஞாபகத்துக்கு வருகிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்துக்கான கடைசி நாளான நேற்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானை ஆதரி்த்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் அப்பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார்.
அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி ஆகியோரும் வாக்குசேகரிப்பில் ஈடுப்டடனர். அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு முன் வீரமணி பேசும்போது பேசுகையில்,
தனி ஈழம் அமைப்பது தான் ஒரே தீர்வு, நான் சொல்வதை கேட்பவர்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி ஈழம் அமைப்பேன் என ஜெயலலிதா பேசியிருக்கிறார். அவர் பேசுவதை பார்த்தால் எனக்கு ரயில்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் தான் நினைவுக்கு வருகின்றன.
ரயில்களில் பயணம் செய்யும் போது பக்கத்தில் இருக்கும் பயணியிடம் நல்லவர் போல் பேசி, பின்னர் அவர்களுக்கு மயக்க மருந்து தடவிய பிஸ்கட்டை கொடுத்து, நகை பணத்தை கொள்ளையடித்து செல்லும் கொள்ள கும்பல் குறித்து பத்திரிகைகளில் செய்தி பார்த்து இருக்கிறோம். ஜெயலலிதாவின் பேச்சும் அப்படி தான் இருக்கிறது.
ஈழம் பற்றி பேசினால், மக்கள் தனது பேச்சில் மயங்கி வாக்களித்து விடுவார்கள் என்று நினைக்கிறார். இலங்கை தமிழர்களுக்காக முதல்வசர் கருணாநிதி எத்தனையோ தியாகங்களை செய்து இருக்கிறார். இலங்கை தமிழர்களுக்காக அவர் நடத்தாத போராட்டமா? தமிழக மக்களுக்கு கருணாநிதி நடத்திய போராட்டங்களின் வரலாறு தெரியும்.
எனவே ஜெயலலிதாவிடம் ஏமாறமாட்டார்கள். சென்னையில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூட இலங்கை தமிழர்களின் உரிமைகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறி இருக்கிறார்.
ஜெ. பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்...
தப்பித்தவறி தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக பொடாவை விட கடுமையான சட்டத்தை கொண்டு வருவார். இது உறுதி. எனவே தமிழக மக்கள் அவரது பேச்சை நம்பி ஏமாறவேண்டாம்.
மத்தியில் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைய காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் வீரமணி.