திருமா. பெயர்-சோனியா சொல்லாதது ஏன்?: வீராசாமி
சமீபத்தில் சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியுடன், சோனியா காந்தி பங்கேற்றார்.
அப்போது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களை அவர் வாசித்தார். ஆனால் திருமாவளவனின் பெயரை மட்டும் அவர் சொல்லவில்லை. இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
இதற்கு தற்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
10.5.2009 அன்று சென்னை தீவுத்திடலில் நடந்த கூட்டத்தில் தோழமைக்கட்சிகள் சார்பில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்களிடம் கேட்டபோது, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொள்வார் என்றும் தொல். திருமாவளவன் தொகுதியில் இருக்க வேண்டிய பணி இருப்பதால் அவர் வர இயலாது என்றும் தெரிவித்து இருந்தனர்.
எனவே தோழமைக்கட்சிகளின் சார்பில் பேசக்கூடியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது, ரவிக்குமார் பெயரை எழுதி சோனியா காந்தியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அந்தப் பெயரை பொதுக்கூட்டத்திலே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
திருமாவளவன் பெயரை அறிவிக்காமல் போனதற்கு சோனியாகாந்தி காரணமல்ல. இருந்தபோதிலும் கூட்டம் முடிந்து வேட்பாளர்களுடன் சோனியாகாந்தி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் திருமாவளவன் இருக்கிறார்.
எனவே இது திட்டமிட்டு செய்த செயல் அல்ல என்று விளக்கியுள்ளார் வீராசாமி.