ஓட்டு.. பிராமணர்களுக்கு எஸ்.வி.சேகர் கோரிக்கை
சென்னை: நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் 100 சதவீதம் பிராமணர்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தென் பிராந்திய பிராமணர் சங்கங்ளின் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.வி.சேகர் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பிராமண வாக்காளப் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள். பெரும்பான்மை பிராமணர்கள் தேர்தல்களில் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில்லை என்ற தவறான கருத்து பல கட்சிகளிடையே உள்ளது.
தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி மற்றும் தீரர் சத்யமூர்த்தி காலத்திலிருந்தே தமிழக ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்கள் பிராமணர்கள் என்பதை இனி வரும் காலங்களிலும் உணர்த்துவோம்.
100 சதவீத பிராமண வாக்குப் பதிவு என்பதை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். பிராமணர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை உறுதி செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களையும், சமூக நீதி அடிப்படையில் பிராமணர்களை ஆதரிக்கும் வேட்பாளர்களையும் மட்டும் நாம் ஆதரிப்போம்.
நம் தொகுதிகளில் போட்டியிடும் பிராமண வேட்பாளர்களில் சிந்தித்து, சிறந்தவரை ஆதரிப்போம். நம்மை ஒதுக்காத யாரையும் நாம் வெறுக்க வேண்டியதில்லை. எக்காரணம் கொண்டும் நாம் வாக்களிக்கத் தவறக் கூடாது.
வாக்களிப்பது நம் கடமை. ஒரு சிறந்த தேசம் உருவாக, நாம் ஒரு மணி நேரம் வெய்யலில் வரிசையில் நின்று ஓட்டளிப்பது நமக்கு நன்மையே செய்யும். நம் லட்சியம். 'தமிழகத்தில் சமூக நீதியாக பிராமணர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு".
அடுத்த இலக்கு 'தமிழக பிராமணர்களின் ஏழு சதவிகித எண்ணிக்கைக்கேற்ப 2011ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத் தேர்தலில் சுமார் 12 பிராமண சட்ட மன்ற உறுப்பினர்கள் (எந்த கட்சியானாலும்) வெற்றி பெற்று கோட்டைக்குச் செல்ல உறுதி எடுப்போம்.
ஒற்றுமையே வலுவானது. நாளை நமதே, இந்த நாளும் நமதே'.