தேர்தல் பிரச்சார செலவு ரூ. 50,000 கோடி!
இந்தியாவில் மக்கள் தொகையை விட அதிவேகமாக உயருவது எது என்றால் அது தேர்தல் பிரச்சார செலவாக தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் தேர்தல் செலவு அதற்கு முந்தைய ஆண்டை விட பன்மடங்கு உயர்ந்து வருகிறது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும், தாங்கள் செலவு செய்யும் கணக்கை அறிவிக்க வேண்டும் என பல கிடுக்கி பிடிகளை போட்டது.
இம்முறை தேர்தல் பிரச்சார செலவு ரூ. 13,000 கோடியை தாண்ட கூடாது என தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்து. ஆனால், தற்போதும் வழக்கம் போல் தேர்தல் செலவுகள் உச்சத்தை தொட்டுள்ளது. தேர்தல் ஆணையம் நினைத்ததை விட சுமார் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தலா ரூ. 20 கோடி வரை தலைவர்களின் பயணத்துக்காக மட்டும் செலவழித்திருப்பதாகத் தெரிகிறது. அதிகபட்சமாக காங்கிரஸ் தலைவர்கள் 21 ஹெலிகாப்டர், 18 ஜெட் விமானங்களை பயன்படுத்தியுள்ளனர்.
பாஜக 21 ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 ஜெட் விமானங்களை பயன்படுத்தியுள்ளது.
இவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு ஹெலிகாப்டருக்கும் 1 மணி நேர வாடகை ரூ. 80 ஆயிரம், இதைத் தவிர ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்க கட்டணம் தனி.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி ஆகிய மூவருக்கு மட்டும் இந்திய விமானப் படை விமானம் தங்களது பிரச்சார கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அரசியல் கட்சிகள் இதுவரை விளம்பரத்துக்காக மட்டும் ரூ. 3,000 கோடி செலவழித்துள்ளன. காங்கிரஸ் தனது பிரச்சார பாடலான ஜெய் ஹோவை மட்டும் ரூ. 1 கோடி கொடுத்து வாங்கியது.
காங்கிரஸ், பாஜக தவிர்த்து சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், சிரஞ்சீவியின் கட்சி மற்றும் பல மாநில கட்சிகளும் எக்கசக்கமாக செலவழித்து இருப்பதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் அடையாள அட்டை, மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்குச் சாவடி போன்றவைகளை அமைக்க மட்டும் ரூ. 700 கோடி செலவழித்துள்ளது. இவை அனைத்தையும் தோரயமாக கூட்டினால் ரூ. 50,000 கோடியை தாண்டிவிடும் என்கிறது ஒரு கணக்கு.