For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் கொலையாளி ரவிச்சந்திரனை விடுவிக்க தமிழக அரசு எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பி.ஆர். ரவிச்சந்திரனை விடுதலை செய்தால், அவர் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவராக மாறக் கூடும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இதுதொடர்பான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளதாவது...

நடந்துள்ள குற்றம் மிகக் கடுமையானது. முன்னாள் பிரதமர், 9 காவல்துறை அதிகாரிகள், 6 தனி நபர்கள் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட முறையில், மிகக் கொடூரமான சதித் திட்டத்தின் மூலம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சதித் திட்டத்தை தெரிந்து கொண்டே அதற்கு மனுதாரர் உதவியுள்ளார்.

தற்போது விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் முற்றியுள்ளது. இந்த சமயத்தில், மனுதாரரை விடுதலை செய்தால், அவர் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக திரும்பும் வாய்ப்புள்ளது.

மற்ற குற்றவாளிகளைப் போல கருணை அடிப்படையில் மனுதாரரை விடுதலை செய்ய இயலாது. காரணம், அவர் மிகக் கொடூரமான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தக் குற்றம் தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் பாதிப்புக்குள்ளாக்கியது.

மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதி, குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தன்னை விடுதலை செய்யுமாறு கோர உரிமை கிடையாது. மேலும், பிற கைதிகளைப் போல தன்னையும் விடுதலை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் கோர முடியாது.

மேலும், மனுதாரரின்கோரிக்கை குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு பரிசீலனை செய்தது. அதில், மனுதாரர், முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடிய தகுதியில் இல்லை என்றும், அவர் கடும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதால், வழக்கமான விதிமுறைகளை இவருக்கு பரிசீலிக்க முடியாது என கூறியுள்ளது.

இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. எனவே இதில் மத்திய அரசின் ஒப்புதலும் தேவை என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக ரவிச்சந்திரன் தாக்கல் செய்திருந்த மனுவில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டியும், 2007ம் ஆண்டு மே 10ம் தேதி முதல்வர் கருணாநிதியின் சட்டசபையில் 50வது ஆண்டையொட்டியும் ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் அடிப்படையில் தன்னையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கில் ரவிச்சந்திரன் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ரவிச்சந்திரனுக்கு ராஜீவ் கொலை வழக்கில் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தற்போது சிறையில் 17 ஆண்டுகளைக் கழித்துள்ளார் ரவிச்சந்திரன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X