விடுதலைப் புலிகள் விமான என்ஜின் சிக்கியது
கொழும்பு: புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகளின் விமானத்தின் என்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.
ராணுவத்தின் 57வது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் புதுக்குடியிருப்பில் உள்ள தரவிபுரம் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது புலிகள் விமானத்தின் ஒரு என்ஜினும், சில உதிரிபாகங்களும் சிக்கின.
புரபல்லர், ரோட்டரி பிளேடுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், ரன்வே விளக்குகள், விமானப்பிரிவு குறித்த சில ஆவணங்கள் சிக்கியவற்றில் சில.
இவை தவிர விமான சக்கரங்கள், இறக்கைகள், பைலட் சீருடைகள், காக்பிட் சாதனங்களும் சிக்கியுள்ளன.
விடுதலைப் புலிகளின் விமானம் தற்போது செயல்படக் கூடிய நிலையில் இருப்பதாக தகவல் இல்லை என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. சமீபத்தில் புலிகளிடம் இன்னும் ஒரு ஹெலிகாப்டரும், விமானமும் இருப்பதாக தகவல்கள் வெளியாயின என்பது நினைவிருக்கலாம்.
கதிர்காமர் கொலை-பிரபாகரனுக்கு வாரண்ட்:
இதற்கிடையே, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோருககு கொழும்பு கோர்ட் மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2005ம் ஆண்டு மனித வெடிகுண்டுக்கு பலியானார் கதிர்காமர். இந்த வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மானுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சார்லஸ் மாஸ்டர், கோமதி மணிமேகலை ஆகியோரும் தேடப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம் கதிர்காமல் வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்த மாணிக்கம் தமிழ் இனியம், ரத்னம் ஜனகன், அய்யர் ராஜ்குமார், சிவராஜா சிவராம், காளிமுத்து திருக்குமார் ஆகியோரை கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.