ரா, ஐபி, சிபிஐ அதிகாரிகளுக்கு பிரியாவிடை தந்த நாராயணன்
16ம் தேதி லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதன் பிறகு புதிய அரசு அமையவுள்ளது. புதிய அரசு அமையும்போது தேசிய பாதுகாபபு ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகிப்போர் ராஜினாமா செய்து விடுவது வழக்கம்.
அந்த வகையில் எம்.கே.நாராயணன் உள்ளிட்ட சிலருக்கு பதவி போகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மீண்டும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இவர்களில் சிலர் மீண்டும் அப்பொறுப்புகளில் நியமிக்கப்படக் கூடும்.
ஆனால் எம்.கே.நாராயணனுக்கு மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி கிடைக்காது என்று உறுதியாக நம்பப்படுகிறது.
காரணம், இவரது பதவிக்காலத்தில்தான் இரு முக்கியப் பிரச்சினைகளில் இந்தியாவின் தலை உலக அளவில் உருண்டது. ஒன்று மும்பை தீவிரவாதத் தாக்குதல். இந்த சம்பவத்தில் இந்திய உள்துறையும், உளவுத்துறையும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.
உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீலின் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து மகாராஷ்டிர முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பதவிகளும் திவாலாகின. ஆனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மட்டும் எப்படியோ தப்பித்துக் கொண்டார். ராஜிவ் குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தை வைத்து இவர் பதவியில் பல்லி போல ஒட்டிக் கொள்ள முடிந்தது.
அடுத்தது, ஈழத் தமிழர் பிரச்சினை. வரலாறு காணாத அளவுக்கு ஈழப் பிரச்சினை சிக்கலாகவும், உலகம் கண்டிராத கொடூரமான இனப்படுகொலை நடந்தேறவும் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளரான சிவசங்கர மேனனும் மேற்கொண்ட குழப்பமான கொள்கை விளையாட்டுதான் காரணம் என நம்பப்படுகிறது.
இவர்கள் இருவரும் சேர்ந்து மத்திய அரசுக்குத் தப்பு தப்பான ஐடியாக்களைக் கொடுத்து மத்திய அரசையும் சேர்த்து நாறடித்து விட்டார்கள்.
இந் நிலையில் நேற்று எம்.கே.நாராயணன் டெல்லியில் பிரியாவிடை விருந்தளித்துள்ளார்.
இந்தியா கேட் அருகில் உள்ள இந்திய விமானப்படை மெஸ்சில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில், இன்டலிஜென்ஸ் பீரோ எனப்படும் ஐபி, ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் எனப்படும் ரா ஆகிய உளவு அமைப்புகளின் தலைவர்கள், சிபிஐ உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை செயலாளர்களும் கலந்து கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கு நாராயணன் ஆற்றிய 'சேவையைப்' புகழ்ந்து பேசினராம்.
இன்னும் தேர்தல் முடிவே வராத நிலையில் இந்த விருந்துக்கு என்ன அவசியம் என சில அதிகாரிகள் கேட்டனராம். மேலும், தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியே அமையும் என்றும் அவர்கள் உறுதியாக தெரிவித்தனராம்.