தபால் ஓட்டு-ஆணையத்துக்கு அழகிரி கண்டனம்
மதுரை: மதுரையில் தபால் ஓட்டுகள் முறையாக பெறப்படவில்லை. வாக்கு சதவீதத்தை குறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என திமுக தென் மண்டல அமைப்பாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை தொகுதியில் திமுக சார்பில் அழகிரியும், அதிமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த பி.மோகன் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் நேற்று அழகிரி நிருபர்களிடும் கூறுகையில்,
மதுரை பாராளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி மிக அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
திமுக மற்றும் காங்கிரஸ் அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை நல்ல முறையில் சென்றடைந்துள்ளன. அதனால் மக்கள் எழுச்சியோடு வாக்களித்து விட்டு சென்றார்கள்.
மதுரையில் தபால் ஓட்டுகள் முறையாக பெறப்படவில்லை. தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று நடவடிக்கை எடுத்துள்ளதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
அதேபோல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் அவர்களது வாக்குகளை பதிவு செய்ய மிகவும் காலதாமதம் ஆனது. இருந்தாலும் நான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெறுவேன்.
ஜெ. குற்றச்சாட்டு பைத்தியக்காரதனமானது...
வாக்குப்பதிவு எந்திரத்தில் இரட்டை இலை சின்னத்தை அழுத்தினால் உதயசூரியன் சின்னம் பதிவாகிறது என்று ஜெயலலிதா புகார் கூறி உள்ளார். அவரது குற்றச்சாட்டு அனைத்தும் பைத்தியக்காரதனமாக உள்ளது.
திருமங்கலத்தில் நடந்த இடத்தேர்தலின்போது திமுக மீது அதிமுக பொய் புகார்களை கூறியது. அதேபோல் இந்த தேர்தலிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினத்தன்று வன்முறையை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிட்டிருந்ததாக ஜெயலலிதா புகார் கூறினார். அது தற்போது பொய் என்று நிரூபணம் ஆகி விட்டது என்றார் அழகிரி.