கருணாநிதி மீது தேர்தல் ஆணையரிடம் அதிமுக புகார்
சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக கூட்டணியினர் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். முதல்வர் கருணாநிதியின் பிரச்சார கடிதமும் விளம்பரம் செய்யப்பட்டு்ள்ளது. இதையடுத்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
தேர்தல் விதிமுறைகளின்படி தமிழகத்தில் மே 11ம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பின்னர் யாரும் எந்த வகையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
ஆனால், திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தங்களுக்கு வாக்களிக்குமாறு மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளன. திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதமும் பத்திரிகைகளில் மே 12ம் தேதி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மாலை 3 மணிக்குப் பிறகு திமுக கூட்டணி கட்சியினரால் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன. இந்த செயலுக்கு உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட் உதவியாக இருந்துள்ளார். திமுக கூட்டணியினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.