டாக்டராக விரும்பும் முதலிடம் பிடித்த நெல்லை ரமேஷ்
பிளஸ்டூவில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து முதலிடம் பிடித்த நான்கு மாணவர்களில் ஒருவர் ரமேஷ். இலஞ்சி பாரத் மான்டிசோரி மேல் நிலைப் பள்ளியில் படித்த இவர் 1183 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
புளியங்குடியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆனால் ரமேஷின் படிப்புக்காக அவரது தந்தை பாலசுப்ரமணியம், தென்காசியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.
ரமேஷின் தந்தை பாலசுப்ரமணியம் புளியங்குடி சர்வோதாய சங்கத்தில் மேலாளராக இருக்கிறார். தாயார் பெயர் ஜெயலட்சுமி.
இவரது மூத்த சகோதரி செண்பகாதேவி பி.இ. இறுதியாண்டு படித்து வருகிறார். இன்னொரு அக்காவான மகேஷ்வரி ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார்.
தனது வெற்றி குறித்து ரமேஷ் கூறுகையில், நான் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். அப்பாவும், அம்மாவும் மற்றும் பள்ளி நிர்வாகமும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நிறைய ஊக்கம் கொடுத்தனர்.
பல்வேறு தேர்வுகளை நடத்தி எனது தனித்திறமையை ஊக்குவித்தனர். எனது சாதனைக்கு பள்ளி நிர்வாகம், எனது பெற்றோர்தான் முக்கிய காரண்ம்.
நான் எதிர்காலத்தில் டாக்டராகி மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்றார்.