பேரழிவு ஏற்படும்-இலங்கைக்கு ஒபாமா எச்சரிக்கை
இலங்கை இனப்பிரச்சினையில் பாரக் ஒபாமா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள கருத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் ஒபாமா பேசினார். அப்போது இலங்கை நிலவரம் குறித்து அவர் மிகவும் கவலை தெரிவித்தார்.
ஒபாமா பேசுகையில், இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட வேண்டும். இதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி தவிர்க்கப்படலாம். மேலும், போர்க்களத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு தேவையான உதவிகளை இரு தரப்பும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இது மிகப் பெரிய பேரழிவாக மாறி விடக் கூடிய அபாயம் உள்ளது.
இரு தரப்பும் தங்களது அரசியல் பிரச்சினைகளை கிடப்பில் போட்டு விட்டு, அப்பாவி பெண்கள், குழந்தைகள், ஆண்களின் உயிர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும். பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட அப்பாவி உயிர்கள் பலியாகாமல் காக்கவே முதலுரிமை தரப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு, அப்பாவி மக்கள் போர்ப் பகுதியிலிருந்து வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்பாவி மக்களை கட்டாயப்படுத்தி படைகளில் சேர்ப்பதும், மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதையும் ஏற்க முடியாது.
இலங்கை ராணுவம், தனது தொடர் பீரங்கித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள், பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்கு வருவதற்கு அவர்கள் உதவ வேண்டும்
மனிதாபிமானப் பிரச்சினையை தவிர்ப்பதற்காக இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதலாவதாக - ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எறிகணைத் தாக்குதல்களை இலங்கை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் பல மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக - போர்ப் பகுதிக்கு ஐ.நா.சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று செல்வதற்கும் அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இலங்கை அரசு அனுமதி தர வேண்டும்.
மூன்றாவதாக - இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மக்களையும் பார்வையிடுவதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். மேலும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும் இலங்கை அரசு அனைத்து சமூக மக்களின் கெளரவத்தையும் பாதுகாக்கும் வகையிலான தீர்வை முன் வைக்க வேண்டும்.
தொடர்ந்து மரணச் சம்பவங்கள் இடம் பெறுவது இலங்கை மக்கள் விரும்பும் அமைதியை அடைவதற்கு தடைக்கல்லாகவே இருக்கும் என்றார் ஒபாமா.